ஞாயிறு, 8 மார்ச், 2015

"எரியிறத புடிங்கினா கொதிக்கிறது தன்னால அடங்கும்"


சமீப காலமாக கிரானைட் குவாரி முறைகேடுகளை பற்றி விரிவான 
திடுக்கிடும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. 
இன்றைய தலைப்பு செய்தியாக விழுப்புரம் அருகில் இருந்த 
இருநூறு மீட்டர் உயர மலை காணாமல் போய் விட்டதாக சொல்லப்படுகிறது.
 நேற்று இரவு ஒரு விவசாயி அந்த மலையை பார்த்ததாகவும் 
இன்று காலையில் தான் அது காணமல் போய் விட்டது என்றும் தான் 
சொல்லவில்லை...ஒரு கொள்ளையோ, கொலையோ கூட 
கண்டு பிடிக்கப்பட தாமதமாகலாம்.. 
அவைகள் ரகசியமாய் நடத்தப்படுபவை.. ஆனால் இந்த கிரானைட் மலைகள் 
எல்லாம் ஒரு மணி நேரத்தில் அதிகாரிகள் கவனிக்காமல் இருந்த போது 
திருடப்பட்டதா..?

ஒருவன் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு சிறு நகரத்தில் டீக்கடை 
வைத்தால் அவனிடம் ஓசி டி குடிக்க உடனே கிளம்பி வந்து லைசென்ஸ் 
வாங்கினாயா என்று மிரட்டும் அளவு அரசு இயந்திரம் விழிப்புடன் 
செயல் படுகிறது. ஆனால் இந்த மலைகளை கிரானைட் குவாரி முதலைகள் 
ஒரே இரவில் விழுங்கி ஏப்பம் விட்டது போல் சொல்வது வேடிக்கையிலும் 
வேடிக்கை.

"எரியிறத புடிங்கினா கொதிக்கிறது தன்னால அடங்கும்" என்று 
எங்கள் கிராமத்தில் சொல்வார்கள். இந்த பண முதலைகளுக்கு அவர்கள் 
போடும் பிச்சை காசுக்காக இந்த நாட்டின் கனிம வளங்களை சுரண்ட 
உதவி புரிந்த அரசு அதிகாரிகள் இந்த நாட்டை பிடித்த கேன்சர் வியாதிகள். 
அவர்கள் முதலில் தீய்க்கப்பட வேண்டியது அவசியம்.
கண் துடைப்புக்காக "இடை நீக்கம்" என்ற பூக்கூடையை வீசி விட்டு 
" செம அடி அடிச்சுட்டேன்" என்று சொல்வது போல் தான் இதுவும்.. 
இவர்கள் உடனே பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
இந்த சம்பவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு நூறு நாள் வேலைக்கு 
வரக்கூடிய அளவிற்கு அந்த அதிகாரியின் குடும்பத்தை கொண்டு 
வந்துவிட்டால் மற்ற அரசு இயந்திர பணியாளர்கள் ஐம்புலன்களையும் 
மூடிக்கொண்டு ஒழுங்காய் வேலை செய்வார்கள்..

அரசு ஊழியர்கள் அரசை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது 
"டெஸ்மா" என்ற சட்டத்தின் மூலம் அவர்களுக்கு கடிவாளமிட்ட 
இந்நாள் முதல்வர் அவர்கள் இப்போதும் தன்னுடைய 
இரும்புக்கரத்தை பிரயோகிக்க வேண்டும். ஓட்டு பொறுக்குவதற்காக 
தர்ம நியாயங்களை புறம் தள்ளி போராடும் அரசியல் காளான்களும் 
புரையோடிப்போன புண்களாம் பெரிய கட்சிகளும் இந்த தேச நலனை 
கருத்தில் கொண்டு முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க 
வேண்டும்.
ஹ்ம்ம்ம்... ஒரு காமன் மென் சொல்வது யார்காதுல என்னிக்குதான் 
விழுந்திருக்கு..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக