ஞாயிறு, 8 மார்ச், 2015

வளர்ச்சி பெரும் சமூக வலைத்தளங்கள்... அசுரனாகவா..?? தேவனாகவா..?? - ஒரு அலசல்.

உலகின் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவிக்கிடப்போரை எல்லாம் ஒன்று திரட்டி நண்பர்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டுவரும் சமூக வலைத்தளங்கள் இரு புறமும் கூர்மையான கத்தியாய் மின்னுகின்றன..


ஒருவருடைய கருத்தை அவரது கோணத்தில் நெடிய விளக்கத்துடன் பதிவு செய்வதில் முகநூல் முன்னணியில் இருக்கிறது .
உலகில் எந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாய் அதற்கு ஒரு பாராட்டு/ நையாண்டி வர்ணனைகளுடன் பதிவுகள் போடுவதில் நேரடி ஒளிபரப்பு தொலைகாட்சி நிருபர்களையும் மிஞ்சி விடுகிறார்கள் முக நூல் பதிவர்கள்.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் அதி வேகமாய் பரப்ப படுகின்றன.. முல்லை பெரியாறு பிரச்சினை முதல் கூடங்குளம் பிரச்சினை வரை.... ஒரு காவல் துறை அதிகாரி நான்கு தோசை கேட்டு தன்னுடைய அரசாங்க முத்திரையுடன் உணவகத்திற்கு கடிதம் அனுப்பியது முதல்..... போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்குவது வரை ஒவ்வொரு விஷயமும் உடனடியாய் உலகின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது..
இதில் பாதி உண்மையாகவும் பாதி கற்பனை கலந்தும் எழுதப்படுகிறது.. இணையத்தில் தேடி எடுத்த பழைய புகைப்படங்களை சமீபத்திய சம்பவங்களில் இணைத்து புதிய செய்தியாக்குவதும்.. போட்டோ ஷாப் யுக்திகளை பயன் படுத்தி சில பல அரசியல் தலைவர்களை அவர்களின் பதவி, வயது, சமூக அந்தஸ்த்து எதை பற்றியும் யோசிக்காமல் பதிவிடுவதும் அவரது நண்பர்கள் அதனை பகிர்வதும் இதன் மூலம் ஒருவரின் செய்தி.. நண்பர்கள்.. நண்பர்களுக்கு நண்பர்கள் என்ற பலரது பக்கங்களில் பரவுவதன் மூலமும் ஒரு வக்கிர கலாச்சாரமும் வளர்க்கப்படுகிறது..


மாறிவரும் கலாச்சாரத்தில் தனிக்குடித்தனம் இருப்போர், தம்பதிக்குள் சிற்சில மனக்கசப்புடன் இருப்போரை இந்த இணைய நட்புகள் வெகுவாக கவர்ந்து வைத்திருக்கின்றன.. தனிமையும் , ஒருவிதமான சலிப்பும் கொண்டிருக்கும் பெண்கள் இந்த சமூக வலைத்தளங்கள் தன்னுடைய மன பாரங்களை இறக்கி வைக்கும் ஒரு இடமாகவும், தன்னுடைய கணவரால் ,- பிள்ளைகளால் கண்டுகொள்ளப்படாத தம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு சிறந்த இடமாகவும் கருதுகின்றனர். இதுபோன்ற பெண்கள் இடும் பதிவுகளுக்கு பாராட்டுக்களும் ஆலோசனைகளும் அங்கீகாரமும் அவரது நண்பர்களால் உடனே கிடைக்கிறது..இதன் மூலம் இணைய இணைப்பில் வரும் அறிமுகம் இல்லாத பெண்களை - அதிலும் குறிப்பாக திருமணமான பெண்களை- அன்பாக பேசுவதுபோல் பேசி அவர்களை தன்வசப்படுத்தி அவர்களிடம் பணம் பறிப்பதிலும் , உடற்கூறியலான தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதிலும் ஒரு மிகப்பெரிய கூட்டமே சுற்றி திரிகிறது.. இந்த மாதிரி செயல்களில் ஈடு படுவோரில் பெரும்பாலானோர் போலி முகவரிகளில் போலி பெயர்களில், போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டு உலா வருவோர். முதலில் "ஹாய்" என்று சாட்டில் ஆரம்பிக்கும் தொடர்பு பின்னாளில் தொலைபேசி வாயிலாக வலுப்பெற்று பின் உல்லாச விடுதிகள் வரை செல்கிறது.. அப்புறம் அதுவே இவர்களை போன்ற அப்பாவி பெண்களுக்கு ஆபத்தாகி தற்கொலை வரை தூண்டுகிறது.


இப்படி கெட்ட விஷயங்கள் நிறைந்து கிடந்தாலும் நல்ல விஷயங்களும் நடக்காமல் இல்லை.. படிப்பு செலவுக்காக வசதி இல்லாமல் கஷ்டப்படுவோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர் , இரத்தம் தேவைப்படுவோர் போன்றோர் உலகின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு உதவியும் செய்யப்படுகிறது.. அதிலும் இப்போது ஒரு சிக்கல்
அதே நேரம் சமீபமாய் நடந்த சிவகாசி வெடி விபத்து.. "சிவகாசி துயர் துடைப்பு குழு " என்று ஒரு குழு உருவாக்கப்பட்டு உதவி கோரப்பட்டது.. சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் ஆக.. வசூலான பின் பொறுப்பெடுத்து வசூல் செய்த ஒரு நபர் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் படுத்தாமல் கையாடல் செய்துவிட்டதாய் குற்றச்சாட்டு எழுகிறது.. உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் இரக்கத்தோடு பணம் அனுப்பியவர்கள்.."ஏமார்ந்து விட்டோமோ.." என்று நினைக்கும் படியாய் இந்த சம்பவம் அமைந்து விட்டதுடன்.. இதுநாள் வரையில் நிஜமாகவே மருத்துவ, படிப்பு காரியங்களுக்காக உதவிகள் கேட்டு செய்தோர் கூட இனிவரும் காலத்தில் செய்ய தயங்கும் சூழ்நிலையும் உருவாக்கி விட்டது..
மற்றபடி நகைச்சுவை, கவிதை, கட்டுரைகள், சினிமா-அரசியல் விமர்சனங்கள் என்று ஒரு நவரச பத்திரிகை போல் சிலரது பக்கங்களும் உண்டு..


முகநூல் பயன்படுத்த தொடங்குபவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் பயன் படுத்துவதாகவும், நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றான்.


ஆக மொத்தம் வதந்திகள் பரப்புவதிலும், குடும்ப கலாச்சாரத்தை சீரழிப்பதிலும் , அரசியல்- சினிமா பிரபலங்களை போலி முகவரியில் இருந்துகொண்டு தரம் தாழ்ந்து விமர்சிப்பதிலும் ஒரு அசுரனாய் மாபெரும் வளர்ச்சி அடைகிறது சமூக வலை தளங்கள்.
நிறைய பேரின் எழுத்து திறமையை வெளிக்கொண்டு வருவதிலும், யாரும் அறியாமல் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும், நல்ல விஷயங்களுக்காக சிதறிக்கிடப்போரை ஒருங்கிணைப்பதிலும் ஒரு தேவனாய் வளர்ச்சி அடைகிறது..
பார்க்கலாம்.. தேவனை அசுரன் வெல்லப் போகிறாரா .. அசுரனை தேவன் வெல்ல போகிறாதா..??
எனக்கென்னவோ அசுரனின் கை ஓங்கி இருப்பதாகவே படுகிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக