சனி, 9 மே, 2015

என்னுள் புதைந்த வாசனைகள்..

ஒருநாள் விகடனில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் படித்தேன்... என்ன ஆச்சர்யம்... சில நாட்களுக்கு முன்தான் நானும் இதை பற்றி சிந்தித்து கிடந்தேன்.. எனக்குள் புதைந்த வாசனைகள் பற்றி...


அம்மாவின் புடவையில் இருக்கும் மசாலா... ஈரம் கலந்த ஒரு வாசம்... அது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கிராமத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரு வினோத வாசம்...


அப்பாமீது எப்போதுமே வெற்றிலை வாசமும் வியர்வை வாசமும் படிந்துகிடக்கும்... எனக்கு கதை சொல்வதற்காகவே சிறுவர்மலரை படித்துவிட்டு நிலா வெளிச்சத்தில் கோரைப்பாயில் படுத்துக்கொண்டு தூங்கும் வரை கதை சொல்லும் சித்தப்பாவின் வாசம் இன்றும் மாறாமல்தான் இருக்கிறது...


புதினா வாசம் எனக்கு முதன் முதலாய் ஒரு பற்பசையில்தான் அறிமுகமாகி இருந்தது... அதற்கு பிறகு புதினா சட்னியோ- புதினா தொகையலோ சாப்பிட நேர்ந்தால் அது அந்த பற்பசை சாப்பிடும் உணர்வையே ஏற்படுத்தியது...


காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குங்குமம் தருவார்களே.. அந்த குங்குமத்தில் மஞ்சள்வாசனை வீசும்.. ஆனால் எனக்கு அந்த வாசனை முன்னாலேயே அறிமுகமாகி இருந்தது... ஆம்... மஞ்சள் பொசிய என் மனைவியின் பின்கழுத்து.... காமாட்சி அம்மன் கோயில் பிரசாதம் என் மனைவியின் வாசனையை கொண்டு வந்ததே தவிர எனக்கு பக்தியை கொண்டுவரவில்லை என்பதை சொல்ல நான் வெட்கப்படவில்லை..


தாய்ப்பால் குடிக்காமல் யாருமே வளர்ந்திருக்கமுடியாது என்றாலும்.. அந்த வாசனையை நம்மால் உணரமுடியும்போது நிச்சயம் அம்மாவாகவோ- அப்பாவாகவோ அவதாரம் எடுத்திருப்போம்.. எனக்கும் அப்படித்தான். என்மகளை தூக்கி உச்சி முகர்ந்தபோது பால்வாசனையும் ஜான்சன் பவுடர் வாசனையும் பதிந்துபோனது.... அந்த பதிவுதான் எனக்கும் என் மகளுக்குமான நெருக்கமாய் இன்று வரை என் ஞாபக அடுக்குகளில் நிலைத்து கிடக்கிறது...


எனக்கான வாசனைகளை தொலைத்துவிட எத்தனையோ வாசனாதி திரவியங்களை பூசினாலும் எனக்கெண்டு இருக்கும் பிரத்தியோக வாசனையும்... காமம் கிளரும் என்னவளின் அக்குள் வாசனையும் பகிரங்கமாய் சொல்ல முடியா ரகசியமானவை..


கல்யாண மாலையில் இருந்த சம்பங்கி பூவாசனை திருமணம் நடந்த மண மேடையையும்... ரோஜா வாசனை .. அகால மரணமடைந்த நண்பனை தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றதையும் நினைவில் கொண்டுவரும் பூவாசனைகள்...


புது துணி வாங்கிய உடன் அதனை மூக்கில் வைத்து ஆழமாய் உள்ளிழுக்கும் அந்த வாசனை நிரந்தரமாய் தங்குவதில்லை என்றாலும்.. அதை எல்லோருமே செய்கிறார்கள்.. 
இரண்டு சக்கரவாகனங்கள் அரிதாய் இருந்த காலத்தில் அது கடந்து சென்ற பின்னும் சில நேரம் காற்றில் கலந்திருக்கும் பெட்ரோல் புகை வாசனை..... ரசாயனங்கள் அதிகமாய் கலக்காத காலத்தில் பக்கத்து ஊரில் மழை பெய்வதை காற்றில் கொண்டுவரும் மண்வாசனை. . 
நிறைய வாசனைகளை நிகழ்வில் இழந்திருந்தாலும் நினைவில் இருந்து அனுபவிக்கமுடிகிறது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக