சனி, 9 மே, 2015

ஆப்பில் ஏறி அமர்ந்த கதை..

நற்பெயர் என்பது கண்ணாடி பாத்திரம் போன்றது.. மிக எளிதாய் உடைய கூடியது..நாம் மட்டும் கவனமாய் கையாண்டால் பத்தாது....நமக்கு தொடர்பே இல்லாத ஒருவரின் வார்த்தை கூட நமது பகுதியில் நாம் வெகுகாலமாய் சேர்த்து வைத்திருந்த நற்பெயர் எனும் கண்ணாடி பாத்திரத்தை உடைக்கும் என்பதை உணர்த்திய ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி இது...

அப்போது காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் விற்பனை அலுவலராக ஒரு வடநாட்டு விவசாய பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.. காஞ்சிபுரத்தில் சுமார் ஐந்தாண்டுகாலம் ஒரு குடும்பத்தினருடன் கட்டண விருந்தாளியாக தங்கி உண்டு அவர்கள் குடும்பத்திலும் அந்த தெருவிலும் ஒரு நெருங்கிய உறுப்பினராக ஆகி இருந்தேன்... அந்த தெருவில் இருக்கும் அனைத்து குடும்பத்தினருமே மிகவும் மரியாதையான பார்வையும் , நம்பிக்கையும் வைத்திருந்தனர்... என் மீதான அவர்களின் மரியாதை, நம்பிக்கை என்ற கண்ணாடிப்பாத்திரத்தை கீறல் கூட விழாத அளவு நான் பக்குவமாய் பாதுகாத்து வந்தேன்...


ஒரு நாள் விடுப்பில் வீட்டில் இருந்த போது அந்த தெருவழியே எதிர்காலத்தை கிளியை வைத்து கணிக்கும் (???) ஒரு ஜோசியர் வந்தார். 
சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக நான் அவரை கூப்பிட்டு ஐந்து ரூபாய் கொடுத்து ( துட்ட கொடுத்து சூனியம் வச்சுகிட்றது இதுதான் ) என்னுடைய எதிர்காலத்தை கணிக்க சொன்னேன்... கிளி ஜோசியரை நான் அழைத்த வேளையில் அக்கம் பக்கம் இருந்த குடும்பத்தலைவிகள் ஒவ்வொருவராய் வந்துவிட்டனர்... 
அடுக்கி வைக்கப்பட்ட சீட்டில் இருந்து அதிகம் யோசிக்காமல் ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு ஒற்றை நெல்லை கூலியாக பெற்று , உழைப்புக்கு கூலி உடனே கிடைத்த சந்தோஷத்தில் மீண்டும் அது வீடு என்று நம்பிக்கிடக்கும் சிறைக்கு சென்று விட்டது....
எடுத்த சீட்டில் என் எதிர்காலம் வரவில்லை... வினை வந்தது.... ஆம்... கலயத்தில் இருந்து வெண்ணையை திருடி தின்றுவிட்டு இதழோரம் வழிய சிரித்துக்கொண்டிருந்தார் குழந்தை கிருஷ்ணன் ... கிளி ஜோசியர்.. அடடா என்று பாராட்டிக்கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்து அந்த கிருஷ்ணர் படத்திற்கான பக்கத்தை விரித்து வாசித்த முதல் வரியில் விழுந்து உடைந்தது நான் ஐந்தாண்டுகலாய் பாதுகாத்து வைத்திருந்த என் மரியாதை கண்ணாடி பாத்திரம்...

"வெண்ணை திருடிய கண்ணன்,,,, இவன் வெண்ணையை மட்டுமல்ல. பெண்ணையும் திருடுவான்.." என்று போட்டாரே ஒரு போடு... அக்கம் பக்கத்து குடும்பத்தலைவிகள் அடி வயிற்றில் உருண்டிருக்கும் போலும் அந்த அக்கினி பந்து... ( அவர்கள் வீட்டில் ஓரிரு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்)

அன்றுமுதல் ஒரு எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கத்தொடங்கினார்கள் .. சகஜமாய் பேசிய பெண் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கினார்கள். அப்புறம் ஒரு வழியாக அடுத்து இரண்டாண்டுகள் கழித்து எனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த வேலையையும் காஞ்சிபுரத்தையும் விட்டு நான் விலகி வர நேர்ந்தது... 
அப்போது அந்த குடும்பத்தலைவிகளிடம் சொல்லிவிட்டு வந்தேன்.. அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்தது சந்தோஷமா......... கவலையா??? அந்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக