சனி, 9 மே, 2015

வெளிநாட்ல எனக்கென்ன வேலை..??

நானும்... என்ன மாதிரி ஆயிர, லட்சக் கணக்கானோரும் ஏன் பொண்டாட்டி, புள்ள, சொந்தம், பந்தம், தேரு, திருவிழா, தீவாளி, பொங்கல்னு எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி வந்து வெளிநாடுகள்ள கஷ்டப்படறோம்.... யோசிச்சு பார்த்து காரணம் கண்டுபிடிக்க சுதந்திர போராட்ட காலத்துக்கு முன்னாடி போகணும்... வாங்களேன்.. போயிட்டுத்தான் வருவோம்...


தண்ணி பஞ்சம் இல்ல... ஏரி குளமெல்லாம் நெறஞ்சுகிடக்குமாம். எல்லோருக்குமே விவசாயம் தான் பொழப்பு.. முப்போகம் விவசாயம்... ஒரு பவுனு பத்து ரூபாயோ பன்னெண்டு ரூபாயோதானாம்.. எரநூறு ரூபா செலவு பண்ணா கல்யாணம் பண்ணிபுடலாமாம்... அதே ஐநூறு ஆயிரம் செலவு பண்ணா தடபுடலா பண்ணிபுடலாமாம்... எல்லோருமே அப்போ கேப்பை கூழுதான் குடிப்பாங்களாம் .. வாரத்துக்கு ஒருமுறையோ ரெண்டு முறையோதான் நெல்லு சோறு...
அப்படிப்பட்ட ஊருல கண்டிப்பா ரெண்டொரு ஏழை ஜனங்க இருப்பாங்க தானே... அந்த கூழு கூட குடிக்க முடியாத வறுமைல கொஞ்சபேறு இருந்தாங்களாம் ... அப்போ இந்தியாவுல இருந்து சிங்கப்பூர்.. பர்மா. மலேசியா... இலங்கை போல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து போகுமாம்... ஆறு மாசத்துக்கொருமுறை இலவசமா ஆளுங்கள ஏத்திட்டு போய் சிங்கபூர்ல இறக்கி விடுவாங்களாம். ஆனா கப்பல்ல போனா உயிர் போயிடும்னு நினைக்கிற அளவுக்கு பயம்... யாரும் அதுக்கு மெனெக்கெடுறது இல்ல...
தவிரவும்.. அவங்களோட தேவைகள் எல்லாம் இங்கயே கிடைச்சதால வெளில போக வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படல...
அந்த சமயத்துல தான் இங்கதான் கூழுகுடிக்க கூட வழி இல்லாத வறுமையா இருக்கே... சரி.. செத்தாலும் பரவாயில்லன்னு சில பேர் துணிஞ்சு கப்பல்ல சிங்கபூர் கிளம்பினாங்களாம் ... ஊர் கூடி ஒப்பாரி வச்சாலும் அந்த வயசு பசங்க துணிஞ்சு கிளம்பிட்டாங்களாம் ... போனவங்க போனவங்கதான்.... அப்படி போன சில பேரு நேதாஜியோட இந்திய தேசிய ராணுவத்துல சேர்ந்து சுதந்திரத்துக்காக போராட வந்துடாங்களாம் ... சிலபேரு சிங்கபூர்லையே தங்கிட்டாங்களாம் ...


அதோட அவங்கள பத்தி ஊரு மறந்து போச்சு...ஒரு பத்து வருஷம் பதினைஞ்சு வருஷம் கழிச்சு அப்படி போன ஏழை இளைஞர்கள் ஊருக்குள்ள வந்தாங்களாம்... சும்மா இல்ல.. பணக்காரங்களா.... ஊரு மூக்குமேல விரல் வைக்குதாம்.... கூழு குடிக்க கூட வசதி இல்லாம உயிரை பணயம் வச்சு போனவங்க.. இவ்ளோ பணத்தோட வந்துட்டாங்களேன்னு... அத பாத்துட்டு அடுத்தடுத்து வசதி இல்லாதவங்களும் கிளம்ப ஆரம்பிச்சாங்களாம்... அங்க போய் யாரும் ராஜாவா வாழலன்னாலும் காசு கிடைக்குதுல்ல... அத வச்சு நிலம் நீச்சு.. பொன் பொருளுன்னு வாங்கலாம்ல... அப்படி சம்பாதிக்க போன இடத்துல எப்படி இருந்தாலும்.. ஊருக்கு வந்ததும் தேங்காப்பூ துண்டும்.. மல்லிகப்பூ செண்டுமா வளைய வரலாம்ல...


ஒன்ன பாத்து இன்னொன்னு... இன்னொண்ண பாத்து இன்னொன்னு... பத்திகிச்சு... எல்லோரும் கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க... இங்க வந்து நாயா பேயா சாப்பிட நேரம் இல்லாம ஓடி ஓடி சம்பாதிச்சாலும் எதையும் அனுபவிக்க முடியாது... ரெண்டு வருஷமோ- மூணு வருஷமோ கழிச்சு ஊருக்கு வந்தா.. இவ்வளவுகாலமும் அடக்கி வச்சு அனுபவிக்க முடியாத விஷயங்களை எல்லாம் அனுபவிக்கிற வெறில காசு கண்ணு மண்ணு தெரியாம கரையும்... ஆனா அவங்க அடக்கி வச்சு மொத்தமா கரைக்கிற ஆசைகள்... எங்கள மாதிரி இருந்தவங்க மனசுல வந்து விதையா முளைச்சு விருச்சமா வளைந்து.. நாமளும் வெளிநாட்டுக்கு போகணும்னு முயற்சி பண்ணி... 
இதோ..... இங்கன வந்து உட்கார்ந்தாச்சு.... ஆசைப்படலாம்.... காசு இருக்கும்.. ஆனா வாங்கி வைச்சுக்க யோசிக்கணும்.. திடீர்னு ரூம் மாறனும்... இல்லன்னா விசாவ கேன்சல் பண்ணி ஊருக்கு தொரத்திட்டா எல்லாத்தையும் அள்ளிகிட்டு போக பிளேன் காரன் ஒத்துக்க மாட்டான்.. அதுக்கு பயந்தே ஆசப்பட்டாலும் வாங்க முடியாது... ரெண்டுமாசம் லீவு கொடுத்து ஊருக்கு போயிட்டு வான்னு அனுப்பினா அப்போ டிவி, டேப்பு ரேடியோ, கை லைட்டு , தேங்காப்பூ துண்டு...அப்படின்னு எதையாச்சும் வாங்கிட்டு ஊருக்கு வந்து ஒரு ஆட்டம் போடணும்...


எங்களோட பக்கத்துல இருந்து பார்த்தா இது அனுபவிக்காம அடக்கி வச்ச ஆசைகளோட மொத்த வெளிப்பாடு.. ஆனா எங்களுக்கு முன்னாடி வெளிநாட்டு சம்பாத்தியக்காரங்க எங்க மனசுக்குள்ள விதைச்ச அதே விதைய எனக்கே தெரியாம ஊருக்குள்ளயே இருக்க நாலஞ்சு பேரோட மனசுலயாச்சும் விதைச்சிட்டு பிளேன புடிச்சு ஓடியாந்துடுவோம்...... அங்க அந்த பசங்க பாஸ்போர்ட் ஆபீசுல போய்தான் முட்டிக்கிட்டு நிப்பாய்ங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக