சனி, 20 ஜூன், 2015

வாங்க ஜெயிக்கலாம் - 1

காலம் காலமாய் கொம்புகளை மறந்த காளைகள் வண்டி இழுக்கின்றன... என்று ஒரு கவிஞன் சொன்னான். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் அவை...
ஒவ்வொரு மனிதனுக்கும் குறைகளையும் நிறைகளையும் கலந்தே நிரப்பி இருக்கிறான் கடவுள்... 
பொதுவாக தாழ்வு மனப்பான்மை என்பது உள்ளிருந்தே கொல்லும் நச்சு செடி.. அழகற்று இருப்பதாலோ... வசதி குறைவாக இருப்பதாலோ... படிப்பு குறைவாக இருப்பதாலோ பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது... இப்படிப்பட்டவர்களின் மனதில் அந்த நச்சு செடி வேரூன்றி இருக்கும்.. அதனை பிடுங்கும் முதல் முயற்சியே இந்த கட்டுரை..



இப்படிப்பட்டவர்களிடம் நிச்சயம் ஒரு திறமை வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் ஆனால் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் சிறை வைத்தது போல்.. திறமை என்னும் ஜீவநதியை தாழ்வு மனப்பான்மை என்ற கமண்டலம் சிறை வைத்திருக்கும்..


அப்படி தாழ்வு மனப்பான்மையுடையவர்கள் உங்கள் வீட்டு குழந்தைகள் எனில் அவர்களிடம் இருக்கும் அந்த திறமையை பெரிதாய் புகழுங்கள்.. அதனை ஊக்குவியுங்கள்... அந்த திறமை மேலும் வளர வழிகளை ஏற்படுத்தி தாருங்கள்.. உங்கள் சொந்தக்காரர்கள், உங்கள் நண்பர்கள் இருக்கையில் உங்கள் குழந்தையின் அந்த திறமையை போற்றி பேசுங்கள்...

அந்த தாழ்வு மனப்பான்மை உடையவர் நீங்கள் எனில் உங்களை நீங்களே சுய பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் உங்களிடம் என்ன நிறை இருக்கிறது என்று கண்டுணருங்கள் அதனை வெளிப்படுத்துங்கள்.. முன்னிறுத்துங்கள். உங்களின் தாழ்வு மனப்பான்மையை பெரிதாக பேசி தம்மை முன்னிறுத்த முயல்பவர்களை பின்னுக்கு தள்ளுங்கள். இந்த விஷயத்தில் உன்னை என்னால் வெல்ல முடியாது என்று சூளுரையுங்கள்..

ஒன்று.. இரண்டு.. மூன்றாவது முயற்சியில் உங்களை மட்டம் தட்டி பேசியவரின் எண்ணம் சிதைவுற தொடங்கும்.. பழுத்த இரும்பை விடாமல் அடிக்கும் சம்மட்டியாய் இருக்கட்டும் உங்கள் முயற்சி...
நாளடைவில் உங்கள் திறமையை சிறை வைத்த கமண்டலம் சிதறும்.. உங்கள் உள்ளுக்குள் படிந்திருந்த தாழ்வு மனப்பான்மை என்ற அழுக்கு கழுவப்படும்.. அப்போது வெற்றி உங்களை அணைக்கும். அதுவரை உங்களை நிராகரித்த அழகோ, படிப்போ, வசதியோ உங்களை தேடி ஓடிவந்து அமரும்..


நீங்கள் வாழ பிறந்தவர்கள்.. நீங்கள் ஆள பிறந்தவர்கள்... என்ன... எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பமா.. இப்போதே தொடங்குங்கள்... இந்த நேரம்தான் இனிய நேரம்..!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக