சனி, 20 ஜூன், 2015

வாங்க ஜெயிக்கலாம் - 4

தொழிலதிபர்கள்.
******************
மகாலத்தில் எழுதப்படும் தன்னம்பிக்கை கட்டுரைகள் எல்லாவற்றிலுமே பில் கேட்ஸும் , மிட்டலும், அம்பானியுமே மேற்கோள் காட்டப்படுகிறார்கள்... அவர்கள் எல்லோருமே திட்டமிட்ட உழைப்பில் முன்னேறியவர்கள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை...

அவர்கள் எல்லாம் பில்லியனிலும் ட்ரில்லியனிலும் விளையாடுபவர்கள்.. சாதாரணர்களுக்கு அவர்கள் அனுபவங்கள் எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை...

என் கண்ணுக்கு முன்னால் நானே பார்த்து, பழகிய மூவரை பற்றிதான் இப்போது சொல்ல போகிறேன்..

முதலாமவர் .. திரு.கணேசன் அவர்கள்.. 
சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி காளிமார்க் (தற்போது கோகோ கோலா நிறுவனமும்,பெப்சி நிறுவனமும் பெரிய போட்டியாக கருதும் நம்மூர் நிறுவனம்) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர்.. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணி செய்ததால் அதன் தயாரிப்பு சூட்சுமத்தை (ஃபார்முலா) கற்றுக்கொண்டார். பின்பு அதிலிருந்து வெளியேறி சில பல வேலைகள் செய்த பின் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்.. இவரது பூர்வீகம் எங்கள் ஊர்தான். குறைந்த முதலீட்டில் ஒரு நிறுவனம் தொடங்கினார்.."ஜெகதா கலர் கம்பெனி.." என்பது அந்நிறுவனத்தின் பெயர்.. தன்னுடைய தாயார் ஜெகதாம்பாள் பெயரில் அமைந்த நிறுவனம் அது..

கீற்றுக்கொட்டகை, தேவையான வாயுக்கள் நிரம்பிய உருளை இரண்டு, அந்த உருளையில் இருந்து வாயுவை குளிர்பானத்துடன் பாட்டிலில் அடைக்கும் ஒரு இயந்திரம், ஒரு சைக்கிள் , 500 /1000 பாட்டில்கள், 10-20 மரப்பெட்டிகள்... இதுதான் இவரது முதலீடு.. பெரும் பலமாய் அவரது தன்னம்பிக்கை மற்றும் தொழில் திறன்..

முதலில் அவர் தயாரித்த குளிர்பானங்கள் உள்ளூர் கடைகளில் விற்பனைக்கு வைத்தார்.. மக்கள் விரும்பி வாங்க தொடங்க பக்கத்து ஊர்களின் கடைகளுக்கும் வியாபாரத்தை விஸ்தரித்தார்.... அப்போது இவர் ஒருவரே தயாரித்து தனியாளாக சைக்கிளில் சப்ளையும் செய்வார்...மக்களுக்கு இவரது குளிர்பானங்களின் சுவை பிடித்து போக விற்பனை சூடு பிடித்தது..கொஞ்சம் கொஞ்சமாக தொழில் வளர்ந்தது நான்கைந்து ஆட்கள் என நிறுவனம் வளர்ந்தது..
நிறுவனம் வளர வளர இவரது ஆசை அதிகரித்தது.. ஒரு காளிமார்க் நிறுவனம் போல் நாமும் வர வேண்டும் என ஆசை பட்டார்... ஆசை பட்டதில் தவறில்லை.. அந்த இலக்கை மிக விரைவில் எட்ட ஆசை பட்டார்.. அங்கே தான் சறுக்க தொடங்கினார்... பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பணக்காரரை பங்குதாரராக இணைத்து இவரிடம் இருந்த சில லகரங்களை முதலீடு செய்து நான்கைந்து இயந்திரங்களுடன் வேறொரு ஊரில் நிறுவனத்தை தொடங்கினார்... பத்து பதினைந்து லாரிகளில் தன்னுடைய நிறுவனத்தின் குளிர்பானங்கள் மாவட்டம் முழுவதும் சப்ளையாவதை போல் கனவு கண்டார்..

இவர் பங்குதாரராக சேர்த்த அந்த பெரும் பணக்காரரோ..கொஞ்சம் கொஞ்சமாக இவரை அரிக்க ஆரம்பித்தார்.. கணேசன் அதை உணரவில்லை.. கடைசியில் நிறுவனம் சரிவை சந்தித்து சந்தித்து நஷ்டத்தில் வந்து நின்றது.. அதுவும் முதலீடே மோசமான நஷ்டம்... அவர் அதுவரை சேர்த்த பணமெல்லாம் நஷ்டமானதில் மனமுடைந்த அவர் பலகீனமடைந்தார்.. அவரது பலகீனம் அவரின் உயிரையும் சேர்த்து கொண்டு போய் விட்டது... ஆம்... அந்த கணேசன் என்ற வளர்ந்திருக்க வேண்டிய தொழிலதிபர் அகலக்கால் வைத்ததால் இன்று நம்முடன் இல்லை...
இரண்டாமவர்.. திரு.ராஜேந்திரன் அவர்கள்.. 

இவருக்கும் பெரிதாக கல்வியறிவு ஒன்றும் இல்லை.. சிறு வயது முதலே ஒரு மொத்த வியாபார மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தார்.. நேர்மையான கடின உழைப்பு.. முதலாளிக்கு இவரை மிகவும் பிடித்து போனது.. சுமார் 10 அல்லது 15 ஆண்டுகள் அந்த மளிகை கடையில் பணி புரிந்து வியாபார நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். பிறகு ஒரு நகரத்தின் குடியிருப்பு பகுதிகள் உள்ளடங்கிய ஒரு தெருவில் சொந்தமாக ஒரு சில்லறை விற்பனை மளிகை கடையை தொடங்கினார்.. அந்த தெருவில் இருபவர்கள் இவருக்கு வாடிக்கையாளர்களாக ஆனார்கள்.. ஆனாலும் வியாபாரம் ஒன்றும் சொல்லிக்கொள்ளுமளவிற்கு இல்லை.. ஒரு வருடம்... இரண்டு வருடம்... பெரிதாய் ஒன்றும் வளர்ச்சி இல்லை... வரவுக்கும் செலவுக்கும் சரியாகவும் சிலநேரம் பற்றாக்குறையாகவும் இருந்தாலும் கூட முதலுக்கு ஒன்றும் மோசம் வந்துவிடவில்லை என்பது ஆறுதலாக இருந்தது..
யோசித்தார்... சரியான நேரத்தில் ஒரு சரியான முடிவை எடுத்தார்... வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கும் இடமில்லை அவரது கடை அமைந்திருந்த இடம்.. ஆகவே கடையை மனைவியின் பொறுப்பில் விட்டார்... மனைவியும் திறமை சாலிதான்.. தெருவில் இருந்த கடையாதலால் அந்த தெருவில் குடியிருக்கும் பெண்களே அதிகம் வாடிக்கையாளர்கள்.. எனவே திரு ராஜேந்திரனின் மனைவி திருமதி.குமுதாவிற்கு கடையை நிர்வகிப்பதில் பெரிதாய் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை..

மனைவியை நிர்வாகத்தில் அமர்த்திவிட்டு , தாம் முன்பு பணிபுரிந்த மொத்த வியாபார கடைக்கே வேலைக்கு போக ஆரம்பித்தார்.. தன்னுடைய கடைக்கு தேவையான பொருட்களை அந்த மொத்த வியாபார கடையில் இருந்தே கடன் சலுகையுடன் எடுத்துகொள்கிறார்... இப்போதும் அவருக்கென்று சொந்தமாக ஒரு சில்லறை விற்பனை கடையும் இருக்கிறது.. இவரும் வேலைக்கு செல்கிறார்... நஷ்டமின்றி நிம்மதியாக இருக்கிறார்...

மூன்றாமவர்.. திரு கோவிந்தராஜ் அவர்கள்.. 

துபாயில் அமைந்திருக்கும் சன் - சிவ்ஸ்டார் பவன் குழும நிறுவனர். எல்லோரையும் போல் தான் இவரும் மாத ஊதியத்தில் பணிபுரிய துபாய் வந்தார்.. சில காலம் ஓரிரு நிறுவனங்களில் மாத ஊதியத்தில் பணி செய்தார். துபாய் நகரத்தின் மீனா பஜார் என்று சொல்லக்கூடிய பகுதியில் விடுமுறை தினங்களில் தமிழர்கள் கூடி தங்கள் பகுதி செய்திகளை பகிர்ந்து கொள்வது வழக்கம்..
பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் கேரளா மாநிலத்தவரின் ஆதிக்கமே நிறைந்திருக்கும். எங்கு பார்த்தாலும் அவர்கள், அவர்களின் கடைகள், தடுக்கி விழுந்தால் அவர்களின் தேநீர்கடைகள், உணவகங்கள்.. கேரளா உணவு வகைகளில் அதிகமாக தேங்காயும், தேங்காய் எண்ணெயும் பயன் படுத்துவார்கள். தமிழர்கள் கடலை எண்ணெய் , நல்லெண்ணெய், சமீபகாலமாக சூரிய காந்தி எண்ணெயில் சுவை கண்டவர்கள்.
மீனா பஜார் பகுதியில் கூடும் தமிழர்கள் "இந்த மலையாளி ஓட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போச்சுப்பா.." என்று புலம்புவதை கூர்ந்து கவனித்தார் திரு.கோவிந்த ராஜ் அவர்கள்...



"ஏன் நாம் ஒரு உணவகம் தொடங்க கூடாது" என்று யோசிக்க... தமிழர்கள் கூடும் அந்த மீனா பஜார் அருகில் இருக்கும் முசல்லா ரோடு பகுதியில் 2000 மாவது ஆண்டில் "சிவ்ஸ்டார் பவன்" என்ற பெயரில் ஒரு தமிழ் உணவகத்தை தொடங்கினார்.. மலையாளி ஹோட்டலில் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துபோயிருந்த தமிழர்களுக்கு தமிழ் நாட்டு ருசியை அறிமுகப்படுத்த... உள்ளூர் சாப்பாடு கிடைத்த மகிழ்ச்சியில் எங்கெங்கு இருந்த தமிழர்களும் சிவ்ஸ்டார் பவனை தேடி வர ஆரம்பித்தனர். வருகை தந்தவர்களை முகம் மலர வரவேற்றார்..சுவையிலும் தரத்திலும் எந்த விதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை அவர்.. வியாபாரம் சூடுபிடித்தது.. துபாய் - கராமாவில் ஒரு கிளை... துபாய் கராமாவில் மற்றொரு பகுதியில் பார்சல் மட்டும் கொடுக்கும் ஒரு கிளை, துபாய் அல் குஸ் பகுதியில் ஒரு கிளை..., அஜ்மான் என்ற நகரத்தில் ஒரு கிளை.. கிளை பரப்பி ஆலமரமாய் விரிய தொடங்கியது சன் -சிவ்ஸ்டார் குழுமம்.

இந்த சமயத்தில் அவருக்கு இன்னொரு யோசனையும் வந்தது.. ஹோட்டலில் சாப்பிடும் தமிழர்களை நமக்கு வாடிக்கையாளார்களாக்கி விட்டோம்... ஆனால் வீடுகளில் சமைத்து சாப்பிடும் தமிழர்களை எப்படி வாடிகையாளர்களாக்குவது...?

பொதுவாக வளைகுடாவில் சமைத்து சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள், பிரியாணி, சாதம், குழம்பு, பொரியல்,வறுவல் என செய்யலாம்.. ஆனால் இட்லி தோசை என்பது கனவுதான்.. ஏனென்றால் அரிசி- உளுந்து ஆகியவற்றை ஊறவைப்பது, அரைப்பது, புளிக்கவைப்பது எல்லாம் எளிதான வேலை அல்ல... உபயோகப் படுத்திக்கொண்டார் திரு.கோவிந்த ராஜ் அவர்கள்.. ஆம்.. இட்லி-தோசைக்கான மாவை அரைத்து பாக்கெட்டில் அடைத்து கொடுக்கும் நிறுவனத்தையும் தொடங்கினார். இன்றையதினம் அவரால் கொடுக்கமுடியாத அளவுக்கு ஆர்டர்கள் குவிகின்றன... அனைத்து சூப்பர் மார்கெட்-ஹைபர் மார்க்கெட்டுகளிலும் இந்த இட்லி- தோசை மாவுகள் கிடைக்கிறது.. சன் -சிவ்ஸ்டார் குழுமம் 13 வது ஆண்டில் வெற்றிநடை போடுகிறது


மேற் குறிப்பிட்ட மூவரில் ஒருவர் தோல்வியை சந்தித்து உயிரையே இழந்திருக்கிறார்.. இன்னொருவர் சமநிலையில் நகர்ந்துகொண்டிருகிறார்.. மூன்றாமவர் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார்...

எப்படி..???
முதலாமவர் தொழில் அறிவு பெற்றிருந்த போதும் பொருளாதார பலமறியாததால், மற்றொருவரின் குணமறியாமல்  அவரை நம்பி அகலக்கால் வைத்ததால் தோல்வியை சந்தித்தார்... இரண்டாமவர் தொழிலறிவு, முதலீடு எல்லாம் பெற்ற போதும் கூட அவரது தொழிலை அமைத்த இடத்தை தேர்ந்தெடுப்பதில் தோற்றுப்போனார்.. ஆனாலும் அவர் தக்க சமயத்தில் எடுத்த சரியான முடிவால் நஷ்டமிலாமல் சமநிலையில் இருக்கிறார்... மூன்றாமவர் சரியான முதலீட்டில் சரியான இடைத்தேர்வில், மக்களின் தேவையை வியாபாரமாக்கும் முயற்சியில், அதற்கான கடின உழைப்பில் இன்று வெற்றிக்கொடியை நாட்டி தொழிலதிபராய் வலம் வந்துகொண்டிருக்கிறார்,,

நீங்கள் எவ்வளவு பெரிய தொழிலை தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை.. ஆனால் நீங்கள் தொடங்கும் தொழிலுக்கான இடம், உற்பத்தி வசதிகள், சந்தைப்படுத்தும் வாய்ப்பு மற்றும் திடமான முதலீடு இதோடு அந்த தொழிலின் அடிப்படை அறிவு, அதனை மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்பிக்கையையும் சேர்த்து நடைமுறைபடுத்தினால்....

இதே போல யாரோ ஒருவர் உங்களை பற்றியும் எங்காவது எழுதிக்கொண்டிருப்பார்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக