சனி, 20 ஜூன், 2015

ராஜீவ் காந்தி

1984 ம் ஆண்டு மெய் காப்பாளர்களாலேயே அந்த இரும்பு மனுஷி சுட்டுக்கொல்லப்பட தேசம் சற்றே தடுமாறித்தான் போனது... 
கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பயின்றபோது, இத்தாலியில் இருந்து அங்கு வந்து பயின்றபடி ஒரு உணவகத்தில் பணி செய்த சோனியாவின் மீது காதல்வயப்பட்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி குடும்ப நிர்வாகத்தை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு, தமது தாய், தாத்தா போன்றவர்கள் கோலோச்சிய அரசியலில் ஆர்வமின்றி விமான ஓட்டியாக பணி செய்துகொண்டு பறந்து திரிந்த அந்த இளைஞனை தன்னுடைய அடுத்த தலைவனாக இந்த தேசம் அடையாளம் கண்டுகொண்டது...

அரசியலில் ஆரவிமில்லாமல் இருந்தாலும் கூட மரபணுவில் ஊறிய அரசியல் அறிவு உன்னதமாய் பிரகாசிக்க இடையிடையே சில தவறுகள் இருந்தபோதும் ஒரு ஸ்திரமான தலைவனாக தன்னுடைய பணியை தொடர்ந்தான் அந்த இளைஞன்..


என் தேசத்தை உலகின் முன்னணி வரிசையில் நிறுத்த வேண்டுமென்றால் தொழில்நுட்ப அறிவில் நமக்கு முக்கியம் வேண்டும் என்ற எண்ணத்தில் , தொலை தொடர்பு கட்டுமானத்தை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் செயற்கை கோள் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான்...

வெற்றி.. வெற்றி.... இந்திய செயற்கை கோள் தொழில்நுட்பம் விண்வெளியின் முக்கிய பங்குதாரகளில் ஒருவரானது... விண்வெளியில் அதுவரை ஆதிக்கம் செலுத்திய வல்லரசு நாடுகள் இந்த இளைஞனை வளர விட்டால் இந்தியாவிற்கு எல்லாவற்றிலும் பங்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று கவலை கொண்டன...

"இவர்களால் ஆபத்து எதுவும் இல்லை... நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள்" என்று தன்னுடைய தாயாரால் அடையாளம் காணப்பட்ட இலங்கையில் (ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள் போன்றவை தென் இந்தியாவில் நிறுவப்பட இதுவே காரணம்) இந்திய பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் அழிவுக்குள்ளாகிறார்கள் என்பதால் அவர்களை காக்கும் பொருட்டு ஒரு மாலை வேளையில் இந்திய விமானப்படை விமானங்களின் பாதுகாப்போடு இலங்கை விண்வெளிக்குள் ஊடுருவிய இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களை இலங்கை தமிழர் பகுதியில் போட்ட போது உலகம் ஸ்தம்பித்து தான் போனது...

மற்றொரு நாட்டின் வான் பகுதியில் அந்த நாட்டின் அனுமதியின்றி அத்து மீறி நுழைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை இந்தியா காட்டியதும் , அதுவரையில் இலங்கையின் இனக்கலவரத்தை பயன்படுத்தி அங்கு காலூன்ற முயன்ற சக்திகள் ( இங்கு இருக்கும் இயற்கை துறைமுகங்கள் எண்ணெய் சேமிப்புக்கும் அதை உலகநாடுகளுக்கு விநியோகிக்கவும் மிக பெரிய வரபிரசாதமாய் அமைந்தவை) இந்தியாவின் இந்த ஆதிக்கத்தை விரும்பவில்லை...

அதோடு அமைதிப்படை என்ற பெயரில் தன்னுடைய படைகளை இலங்கை மண்ணில் நிலைகொள்ள செய்தது...

(ஒரு ராணுவம் என்பது கட்டுப்பாடுகள் நிறைந்தது என்றாலும் மற்றொரு நாட்டில் ஊடுருவும் போது அவை சில அத்துமீறல்களில் ஈடுபடுவது போர் மரபு... இது தவறென்றாலும் தடுக்கமுடியாதது...)

ஏற்கெனவே விண்வெளியில் தன்னுடைய ஆதிகத்தை நிலை நிறுத்திய இந்தியாவின் மீது கோபத்தில் இருந்த வல்லரசுகள், இலங்கையில் காலூன்றதுடித்த மற்ற நாடுகளோடு சேர்ந்து இப்படி ஆதிக்க சக்தியாக வளரும் இந்தியாவின் இளம் ரத்த தலைமையை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்..

சில பல கசப்புகளோடு இருந்த புலிகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள, 1991 ல் ஒரு கருப்பு நாளில் அந்த இளம் புயல் இரத்த பிண்டங்களாய் சிதறி போனான்...

ஒரு தேசம் தலைவனை இழந்தது... ஒரு மகனும் மகளும் தந்தையை இழந்தனர்.. ஒரு காதல் மனைவி கணவனை இழந்தாள் ... சதி தீட்டிய சக்திகள் உண்மைகளை புதைத்து விட்டன...
தேசத்திற்காக கனவுகண்டு அதனை நிறைவேற்றும் முயற்சியில் இருந்தபோது சிதறடிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் பிறந்ததினம் இன்று...!!

(குறிப்பு... அவர் இறந்ததற்கு பிறகு பிறந்து யூ டியூப்பில் தமிழுணர்வு வளர்த்து இன்று ராஜீவை பற்றி தெரியாமல் விமர்சிக்கும் விபரமும் அனுபவமும் இல்லாதவர்கள் நகர்ந்து விடவும்... இங்கு விமர்சிப்பதை நான் விரும்பவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக