திங்கள், 27 ஜூலை, 2015

பகீரத பிரயத்னம்...



பல முயற்சிகளுக்கு பிறகு வெற்றி பெறுவது, பல தோல்விகளுக்கு பிறகு வெற்றி பெறுவது, ஒரு இலக்கை குறிவைத்து பல போராட்டங்களை நிகழ்த்துவது ஆகிவற்றை பற்றி குறிப்பிடும்போது "பகீரத பிரயத்னம்" என்று சொல்வார்கள்... 
இதன் அர்த்தம் என்ன...??
கதைக்குள் போவோமா....????



சூரிய வம்சத்தில் பிறந்து நல்லாட்சி புரிந்தவன் சாகரன் என்ற மன்னன்... பகையரசர்களை எல்லாம் வென்று தன்னுடைய வெற்றியை பறைசாற்ற அஸ்வமேத யாகம் நடத்தினான். அஸ்வமேத யாக குதிரை சுற்றி வரும் வேளையில் எங்கே தன்னுடைய பதவிக்கும் ஆபத்து வந்துவிடுமோ என பயந்த இந்திரன் குதிரையை திருடி , இமயமலையில் ஆசிரமம் அமைத்து தவம் இருந்துவந்த கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்துவிட்டான்..
குதிரையை காணாத சாகர மன்னனின் புதல்வர்கள் அந்த குதிரையை தேடி , கபில முனிவரின் ஆசிரமத்தில் அது கட்டப்பட்டிருப்பதை அறிந்து சினம் கொண்டனர்.
முனிவர்தான் அந்த குதிரையை கட்டி வைத்திருக்கிறார் என்று தவறாக எண்ணிய இளவரசர்கள் முனிவரை துன்புறுத்தினர். சினம் கொண்ட முனிவர் தன்னுடைய தவ வலிமையால் இளவரசர்களை எரித்து சாம்பலாக்கி விட்டார்..


புதல்வர்கள் அனைவரையும் இழந்த சாகர மன்னன் அரசை துறந்து தன்னுடைய பேரனான அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவமிருந்து முக்தியடைந்தான்.
அம்சுமான் தன்னுடைய தந்தை- பெரியப்பா- சித்தப்பாக்களின் ஆன்மாவை முக்தியடைய செய்யும் நோக்கில் பல முனிவர்கள் மகான்களிடம் யோசனை கேட்டான்.. எல்லோருமே ஒரே விஷயத்தை சொன்னார்கள்.. தேவலோக நதியான கங்கையில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அவர்களது ஆன்மா சொன்னார்கள்...
மானுட அஸ்தியை தேவலோக நதியில் கரைப்பது சாத்தியமில்லை . எனவே கங்கை நதியை பூமிக்கு கொண்டுவர வேண்டும்... எப்படி...?? கடும் தவத்தால் மட்டுமே சாத்தியம்...

அப்படி ஒரு கடும் தவத்தை அம்சுமானால் செய்ய முடியவில்லை... அவனுக்கு பிறகு வந்த அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை. அதன் பிறகு வந்த பகீரதன் தமது முன்னோர்களின் கதையை வசிஷ்ட முனிவர் மூலம் அறிந்து தன்னுடைய முன்னோர்களின் ஆன்மாவை முக்திபெற செய்ய, கங்கா தேவியை பூமிக்கு கொண்டுவர கடும் தவம் புரிந்தான்.
கங்கா தேவியும் பூமிக்கு வர சம்மதித்தார்.. ஆனால் "என்னுடைய வேகத்தை பூமி தாங்காதே.. என்ன செய்வாய்...??" என கேட்க.. செய்வதறியாமல் திகைத்தான் பகீரதன்..
சிவபெருமானை நோக்கி தன்னுடைய தவத்தை தொடங்கினான்... வெகுகாலம் நீண்ட தவத்தின் முடிவில் சிவபெருமான் பகீரதனுக்கு தரிசனம் தந்தார். பகீரதன் தன்னுடைய தவத்தின் நோக்கத்தை சொல்ல.. , பூமிக்கு வரும் கங்கையை தன்னுடைய ஜடாமுடியில் தாங்கி அதன் வேகத்தை குறைக்க சம்மதித்தார்.


  அவ்வாறு வேகம் குறைக்கப்பட்டு ஓடிய கங்கையில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்தி கரைக்கப்பட்டு அவர்கள் முக்தியடந்தார்கள். அந்த இடமே இன்றைய காசி..


தேவலோக நதியான கங்கையை கடுந்தவம், பெருமுயற்சி செய்து பூமிக்கு கொண்டுவந்த பகீரதனின் முயற்சியே "பகீரத பிரயத்னம்" என்று இன்றளவும் சொல்லப்படுகிறது...
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக