செவ்வாய், 28 ஜூலை, 2015

காமராஜர் - சில நினைவலைகள்



காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று "ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே.." என்று கேட்டார்.. அந்த சிறுவன் "பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு" என்றானாம்... "சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா..." என்றிருக்கிறார்... "ஓ .. போவேனே.." என்றானாம்... சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக
இருந்த திரு என் டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து பள்ளிக்கூடத்தில் மதியம் சாப்பாடு போடுவதற்கு ஒரு திட்டம் கேட்டிருக்கிறார்... ஒரு குழந்தைக்கு இரண்டு அனா செலவில் என் டி சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு திட்டத்தை வரையறை செய்து கொடுத்தாராம்.. அதுதான் மதியஉணவு திட்டம்...

அவர்தான் காமராஜர்..!!!


ஒருமுறை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு ரெயில்வே கிராசிங்கை சென்றடைந்தது முதல்வர் காமராஜரின் வாகனம்... சற்று நேரத்தில் ரயில் கடக்கவேண்டியதாகையால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.... ஒரு அதிகாரி வேகமாக கேட் கீப்பரிடம் போய் முதல்வர் வாகனம் வருகிறது.. கேட்டை திறந்துவிடு என்று சொன்னார்.. இதை கவனித்த காமராஜர்.. அந்த அதிகாரியை கூப்பிட்டு... "ஏன்யா... நான் ரயில்ல அடிபட்டு சாகனுமா.... ரயில் வரப்போ அதுல யாரும் மாட்டிக்க கூடாதுன்னுதானே ஒரு கேட்டும் போட்டு அதுக்கு ஒரு ஆளும் போட்டிருக்கோம்... அப்புறம் ரயில் வர நேரத்துல நீ கேட்ட தொறக்க சொன்னா என்ன அர்த்தம்னேன்.." என்று கேட்டாராம்...
ரயில் கடந்ததும் காரில் இருந்து இறங்கி அந்த கேட்கீப்பரிடம் செல்ல.. அந்த கேட்கீப்பர் வெலவெலத்துப்போனாராம் .. நீ செஞ்சதுதான் சரின்னேன்... இந்த இடத்துக்கு நீதான் எஜமான்... உன் வேலைய நீ கரெக்டா தான் பன்னேன்னேன்.." என்றாராம்...

அவர்தான் காமராஜர்...!!!

1967 ல் தேர்தலில் திமுக வை சேர்ந்த சீனிவாசன் என்ற வேட்பாளரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த காமராஜர் வீட்டில் அமர்ந்திருந்தாராம்.. காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்தார்களாம்.. அப்போது காமராஜர் சொன்னாராம்... இதுக்குத்தானய்யா சுதந்திரம் வாங்கினோம்னேன் .. ஜனநாயகம் கொண்டுவந்தோம்னேன் .. அப்புறம் ஏன்யா வருத்தப்படனும்?? நான் தோத்துப்போனதுலையே தெரியுதுல்ல.. நாம தேர்தல ஒழுங்கா நடத்தி இருக்கோம்னு.. அப்புறம் ஏன் வருத்தப்படனும்னேன்..."

அவர்தான் காமராஜர்..!!!.

திண்டுக்கல் நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் ஒரு பஞ்சு மில் திறக்க அனுமதியளைத்தாராம் காமராஜர்.. அவ்வளவு தூரம் உள்ளடங்கி இருக்குங்கைய்யா... அதுக்கு அனுமதி கொடுக்க சொல்றீங்களே.. என அதிகாரி ஒருவர் கேட்டாராம்... அதெல்லாம் நான் பேசிட்டேன்... திண்டுக்கல் ல இருந்து அவன் செலவுலேயே கரெண்டு எடுத்துக்கிறேன்னு சொல்றான்.. அந்த வழில இருக்க அறுபது கிராமத்துக்கும் கரெண்டு எடுத்துக்கலாம்னேன்.. என்றாராம் காமராஜர்...

அவர்தான் காமராஜர்..!!!

முதல்வராக இருந்த காலத்தில் காமராஜரின் தாயார் முதல்வரின் இல்லத்தில் தங்க ஆசைப்பட்டிருக்கிறார்.... "அம்மா என் கூட தங்கணும்னு ஆசைப்படும்தான்... ஆனா அது வந்து இங்க தங்கினா அத பார்க்கிற சாக்குல தங்கச்சி வரும்.. அப்புறம் தங்கச்சி புள்ளைங்க வருவாங்க... ஒவ்வொருத்தரா வந்து தங்குவாங்க.. அப்புறம் ஏதாவது பிரச்சினை வரும்.. வேனாம்னேன்.." என்றாராம்...

அவர்தான் காமராஜர்..!!!

காமராஜர் ஒருமுறை கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டாராம்.. சாப்பிட்டு முடித்த பிறகு வெளியில் வந்து தன்னுடன் வந்தவரிடம்.. "எல்லோரும் அரை கண்ணப்பனாவே இருக்காங்க" என்றாராம்...

அதென்ன அரை கண்ணப்பன்..??

பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்ணப்பநாயனார் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே..??

அந்த கதையில் சிவபெருமானுக்கு பிடிக்குமா- பிடிக்காதா என்பதைப்பற்றி எல்லாம் கண்ணப்பன் கவலைப்படவில்லை... அவனுக்கு பிடித்ததை மட்டுமேதான் சிவனுக்கு படைத்தான்...
ஆனால்.. கண்ணப்பனுக்கு சிவபெருமானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை...

அதே போல காமராஜருக்கு விருந்தளித்தவர்கள் அவர்களுக்கு பிடித்ததை தான் பரிமாறினார்கள்... ஆனால் அவர்களின் கவனிப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது என்பதைத்தான்.. "அரை கண்ணப்பன்" என்று சொன்னாராம்...


சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்...!!

- கவியரசு கண்ணதாசன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக