புதன், 7 செப்டம்பர், 2016

சதுரங்க ஆட்டை...



நம்மூர்ல இருக்க அம்மா- அக்கா- அத்தை- அத்தாச்சிங்க எல்லாம் நம்மள "அவன் ஒரு முட்டாப்பய... பேச்சு மட்டும் உலகமே தெரிஞ்ச மாதிரி பேசுவான்... ஆனா ஒரு மண்ணும் இருக்காது... சும்மா வாய்ல தான் பிரியாணி போடுவான்... " அப்படின்னு புகழ்றாங்களாம் ...

இப்போ ஒரு சுவாரஸ்யம் வந்திருக்குமே.. கொஞ்சம் பெரிய பதிவுதான்.. இதே சுவாரஸ்யத்தோட தொடர்ந்து படிங்க...

கிராமங்கள்ல சீட்டுக்காரங்கன்னு ஒரு குரூப்பு வாடகை சைக்கிள்லையோ , டி வி எஸ் எக்செல்லையோ சுத்திகிட்டு திரிவாய்ங்க... தவணை முறைல கட்டில், பீரோ, காத்தாடி, நாற்காலி, மேஜை, ஃபிரிட்ஜ் எல்லாம் கொடுப்பாங்க...

வாரம் ஒரு முறை வசூலுக்கு வருவாங்க... நம்ம மக்கள் நூறுநாள் வேலைல மிச்சம் பண்ண காசுலையோ- புருஷன் பாக்கெட்ல ஆட்டைய போட்ட காசுலையோ ( இவனுக்கு எங்கள சீண்டலன்னா பொழுது போகாது ..# மைன்ட் வாய்ஸ் படிச்சுட்டேன் அக்காக்களே ) அம்பதோ- நூறோ கட்டுவாங்க...

பொருளோட மதிப்புல பாதி அளவு கட்டினதும் பொருளை கொண்டு வந்து கொடுப்பாங்க... ஒரு டெம்போவுலையோ, குட்டியானைலையோ கிரைண்டர், பீரோ, பிளாஸ்டிக் நாற்காலி எல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு அவங்க வசூல் பண்ற எல்லா ஊருக்குள்ளயும் வலம் வருவாங்க... இதுவும் ஒரு விளம்பர தந்திரம் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மூணு பேருக்கோ, நாலு பேருக்கோ பொருளை கொடுப்பாங்க...இதுதான் தூண்டில்ல புழு கோக்குற தந்திரம்...

அட... அவங்க ஏமாத்த மாட்டாங்கப்பா.... கரெக்டா கொடுக்கிறாங்கலாம்னு செய்தி காட்டு தீ போல பரவும்... இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.... முதல்ல பணம் கட்டி பொருள் வாங்கினவங்க எல்லாம் வசதிக்காரங்களா இருப்பாங்க... அவங்களுக்கு ஒரு நாற்காலியோ, ஒரு ஸ்டீல் பீரோவோ கொண்டு போய் கரெக்டா டெலிவரி கொடுத்திடுவாங்க....

"அதோ... அந்த முக்குல இருக்குள்ள பச்ச கலர் மாடி வீடு... அவங்க வீட்ல இப்போ தான் அக்கா ஒரு பீரோ கொடுத்துட்டு வரோம்... வேணும்னா கேட்டு பாருங்க..." என்று அந்த மாடி வீட்டுக்காரரையும் துணைக்கழைத்து கொள்வார்கள்...

அப்புறம் என்ன... அவங்க வாங்கிட்டாங்க... அப்படின்னு ஒரு எண்ணம் மண்டைக்குள்ள குடையும்.. நாமளும் வாங்கனும்னு ஒரு ஆர்வம் கிளம்பும்... அப்படின்னு ஊரே திரண்டு பணம் கட்டும்.. ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் ஆகற வரைக்கும் தான் இவங்க வாரம் வாரம் வருவாங்க.. இந்த டார்கெட் ரீச் ஆக சிலருக்கு ஆறுமாசமோ.. சிலருக்கு ஒரு வருஷமோ.. சில கம்பெனிக்கு நாலஞ்சு வருஷமோ கூட ஆகும்... ஆனா ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் அந்த கொக்கு காத்திருக்கும்...

அப்புறம் சொய்ங் ன்னு பறந்து போய்டும்.. கடை இருந்ததுக்கான தடயமே இருக்காது..... 

நான் ஊர்ல இருந்தப்போ ராதா அத்தான் டீக்கடைல உட்கார்ந்திருந்தேன்... நம்மள எப்படித்தான் கரெக்டா கண்டு பிடிக்கிறாய்ங்களோ தெரியல... நம்மகிட்ட வந்து ஒரு ஆள் இந்த மாதிரி விஷயம் னு சொன்னார்.... நமக்கு இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம் அரசல் புரசலா காதுல விழுந்திருந்ததால.. ரொம்ப கெட்டிக்காரத்தனமா..... "எனக்கு ஒரு ஃபிரிட்ஜ் வேணும்... எவ்ளோ அமவுண்ட்ட சொல்லுங்க.. அதுல பாதிய நான் இப்போவே கட்டிட்டு பொருள எடுத்துக்கிறேன்" அப்படின்னு சொன்னேன்...

"ஓ.. தாராளமா சார்.... எல்லா பிராண்டும் இருக்கு.. சாம்சங், எல் ஜி, வேர்ல்பூல்... எது வேணுமோ எடுத்துக்குங்க ...அடுத்த திங்கக்கிழமை வந்து எடுத்துக்குங்க.. ஆனா இப்போ நீங்க நூறு ரூபா கட்டி உங்க பெற ரிஜிஸ்டர் பண்ணிக்குங்க சார்..."ன்னு ஒரு வாரம் அப்புறம் வர போற திங்கக் கிழமையை குறிப்பிட்டான் அந்த ஆள்...

நான் ஏன் அப்படி கேட்டேன்??? அவன் ஏன் அப்படி சொன்னான்...???

"எப்படியும் இவனுங்க ஏமாத்திட்டு ஓடிடுவானுங்க,... முதல்ல பாதி பணம் கட்டி பொருள கைப்பத்திட்டோம்னா.... தொடர்ந்து வந்தா மிச்ச பணத்தை கட்டுவோம்... ஒருவேளை ஓடிட்டான்னா நமக்கு பொருள் வந்திடுச்சு.... மிச்ச பணத்தை வசூல் பண்ண வரமாட்டான்.. நமக்கு மிச்சம்..." # இது என்னோட யோசனை...

"அட பக்கி பயலே.... நாங்க எம்புட்டு பெரிய களவானிப்பயலுங்கள எல்லாம் பார்த்தவிங்க.. நீ என்னடா பிஸ்கோத்து..." அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்ட அந்த ஆள் என் கிட்ட நூறு ரூபா வாங்கிகிட்டு, அவனோட ரசீது புத்தகத்துல தெளிவா என்னோட பேர எழுதி கையெழுத்தும் வாங்கி கிட்டான்... ஆனா அத காட்டி காட்டி... "நம்ம செந்திலண்ணன் இல்ல.... வெளிநாட்டுல இருந்து வந்திருக்காருல்லம்மா.... அவரு கூட கட்டி இருக்கார் பாருங்க..."ன்னு சொல்லி சொல்லி ஊரெல்லாம் வசூல் பண்ணிட்டான்...

"அந்த தம்பி ரொம்ப வெவரமா பேசும்.... அந்த தம்பியே பணம் கட்டி இருக்குனா நாமளும் கட்டலாம்"ன்னு ஊருல இருக்க அம்மாங்க, அக்காங்க, அத்தாச்சிங்க, அத்தைங்க எல்லாம் கடுகு டப்பா, மிளகு டப்பால கிடந்த நூறு அம்பது எல்லாம் கொண்டு வந்து கட்டிட்டாங்க....

அவன் குறிப்பிட்ட திங்கக்கிழமையும் வந்துது... நானும் கிளம்பி அவன் சொன்ன இடத்துக்கு போனேன்... கடை புதுசா செட்டப் பண்ணி இருந்தான்... நமக்கு நம்ம எண்ணம் உறுதியாயிடுச்சு... இவன் எப்படியும் ஓடிருவான்.. நாம வாங்க போற பிரிட்ஜ்க்கு கட்டப்போற தவணைல 1000 ரூபா மிச்சம் நின்னாலும் நமக்கு ஆதாயம் தான்...

(இதுவரைக்கும் செந்தில் கெட்டிக்காரத்தனமா தான யோசிச்சு இருக்கான்.. இவனை ஏன் ஊர்ல இருக்க பொம்பளைங்க திட்டனும்...??? கேள்வி வருது தான... )

நான் அவன் கடைக்கு போனப்போ என்கிட்ட வசூல் பண்ணவன் இல்ல.... நான் சீட்ட காட்டி விஷயத்த கேட்டப்போ... அங்க இருந்த ஆள் சொன்னான்... "ஆமா சார்.. இது நம்ம கடைதான்.. அவர் நம்ம ஏஜென்ட் தான்... இருங்க ஹெட் ஆபீஸ்ல கேக்கிறேன்... " அப்படின்னு சொல்லிட்டு எங்கயோ ஃபோன் பண்ணான்... அப்புறம்.." சார்... இப்போதைக்கு சின்ன சின்ன பொருள் மட்டும் தான் வந்திருக்கு... டி வி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் எல்லாம் அடுத்த வாரம் தான் வருது... நீங்க வேணும்னா இப்போ பணம் கட்டிட்டு போங்க... பொருள் வந்ததும் அனுப்பிட்றோம்"ன்னான்..

அட.... இவன் நமக்கு அல்வா கொடுக்க ப்ளான் பண்றான்னு, எனக்கு இபோ கொடுக்க முடியும்னா கொடு.. நீ கேக்கிற தொகைய நான் கற்றேன்.. இல்லன்னா என் நூறு ரூபாய திரும்ப கொடு.." அப்படின்னு கேட்டேன்.. எதுவும் பேசாம அந்த நூறு ரூபாய கொடுத்துட்டான்...

"அந்த மாடி வீட்டுக்காரங்க பீரோ வாங்கினாங்க"ன்னு சொல்லி ஆள் செர்த்தப்போ அட்லீஸ்ட் அந்த மாடி வீட்டுக்காரங்களுக்கு மார்கெட் விலையை விட நூறு இருநூறு கம்மியா ஒரு பொருள் கிடைச்சுது.. ஆனா நம்ம பேர அவன் இலவசமாவே பயன் படுத்தி அவன் டார்கெட்ட ரீச் பண்ணிட்டான்....

அட.. ஆமாப்பா .. ஆமா..... ஒரு ராத்திரியோட ராத்திரியா எல்லாத்தையும் அள்ளி வண்டில போட்டுக்கிட்டு ஓடிட்டாய்ங்களாம்.. கடை இருந்த தடயமே இல்லையாம்...

இப்போ மறுபடியும் முதல்ல இருக்க பாராவ படிங்க....

# இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... இந்த மாதிரி களவானிப்பயலுக உங்க ஊருக்குள்ளயும் வருவாய்ங்க... என்னை மாதிரி ஒரு கெட்டிக்கார ஏமாளியும் இருப்பான்.. அவன் உஷாராயிடுவான்... போய்டுவீங்க.... சூதனமா பொழச்சுக்குங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக