புதன், 28 ஜூன், 2017

ப்ரா..

Brassier என்பதன் சுருக்கமே Bra.. இப்படி ஒரு தலைப்பை பார்த்ததும் நிறைய பேர் முகம் சுழிக்கக் கூடும்... ஏனென்றால் நான் சார்ந்த தமிழ் சமூகம் நம்மை அப்படித்தான் சித்திக்க வைத்திருக்கிறது...



ஒரு சாதாரண உள்ளாடை என்பதை தாண்டி அதை அணிந்திருக்கும் இடத்தையும் கற்பனை செய்ய வைத்து அந்த துணிக்கும் உயிர் கொடுத்து வைத்திருக்கிறது ,, ஆண்களின் உள்ளாடைகளான பனியன்-ஜட்டி என்னும் போது இல்லாத ஆர்வம் ப்ரா என்னும்போது எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறது...

ஒரு ஆணாக இது எனக்கும் பொருந்தும் .
நான் உள்ளாடைகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாய் பணிபுரிந்த காலத்தில் பெண்களுக்கென்ற பிரத்யோக உள்ளாடைக்கடைகளுக்கு போக வேண்டிய அவசியம் இருந்தது... ஆரம்ப காலத்தில் எல்லோரை போலவே எனக்கும் அதன் வடிவமைப்பு-வேலைப்பாடுகள் ஆகியவற்றை பார்க்கும் ஆர்வம் இருந்தததை பதிவு செய்ய வெட்கப்படவில்லை நான்.


ஒரு ஆணிற்கான உள்ளாடையை ஒரு பெண்ணால் எந்த சலனமும் இன்றி தேர்வு செய்ய முடிகிறது.. துவைக்க முடிகிறது... மடித்து வைக்க முடிகிறது ஆனால் மனைவிக்கே கூட ஒரு உள்ளாடையை ஒரு ஆணால் எளிதாக வாங்க முடிவதில்லை..


இதற்கான காரணத்தை உற்றுநோக்கினால் .. இதற்கு காரணம் பெண்கள் தான்... இதனால் பாதிப்புக்குள்ளாவதும் பெண்கள் தான்... நம் தாய், சகோதரி முதல் பக்கத்து வீட்டு கொடிக்கயிறு வரை..... பத்திரிகைகள் முதல், டி வி சீரியல், திரைப்படம் வரை அதை மறைத்து மறைத்து, அதற்கு உயிரூட்டி இருக்கிறது..


யாருக்கும் நம் மீது இல்லாத நெருக்கம் உள்ளாடைகளுக்கு உண்டு. வியர்வை துளைகள் வழியாக வெளியேறும் கழிவுகளை உறிஞ்சி கிருமிகளின் மொத்த குடியிருப்பாக மாறும் அந்த உள்ளாடைகளை நன்கு துவைத்து வெய்யிலில் உலர்த்த வேண்டும் என்பது அடிப்படை உண்மை... எத்தனை பெண்களுக்கு தங்கள் உள்ளாடைகளை வெய்யிலில் உலர்த்தும் வாய்ப்பு கிடைக்கிறது....??

ஆண்களே... பெண்களே... இந்த சமூகம் கற்பித்தபடி அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை.. வெற்றுத் துணி... அவ்வளவுதான்....


தலைப்பை பார்த்ததும் ஏதோ கிளுகிளு சமாச்சாரம் இருக்குமோன்னு நினைச்ச ஆண்களுக்கும்.... அட வெக்கங்கெட்டவனே... இதை எல்லாமாடா எழுதுவ... என்று நினைத்த பெண்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.... அது உங்க தப்பு இல்ல... உங்கள அப்படி யோசிக்க வச்ச சமூகத்தோட தப்பு...

பாலகுமாரனின் இரும்புக்குதிரைகளை படித்தபோது இரண்டு பாத்திரங்கள் உரையாடிக்கொள்ளும் வரிகளில் இது பற்றி நான்கு வரிகள் எழுதி இருந்தது எனக்குள் இந்த சிந்தனைக்கு வித்திட்டது...
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக