வியாழன், 29 ஜூன், 2017

"அக்கறை" என்ற "அக்கரை"

நவீன வாழ்க்கை முறையில் அதிவேக இயந்திரங்களாய் இலக்கில்லாமலோ - அல்லது எட்ட முடியாத இலக்கை நிர்ணயித்துக்கொண்டோ ஓடிக்கொண்டே இருந்தாலும் எல்லோர் மனதிற்குள்ளும் இருக்கும் எதிர்பார்ப்பு இதுதான்.. 


No automatic alt text available.

அக்கறை.... யாராவது நம் மீது.. நம் உடல் நலன் மீது, நம் மனநலன் மீது, நம் ஆசைகள் மீது, நம் தேவைகள் மீது அக்கறை கட்ட மாட்டார்களா என்ற ஏக்கம் எல்லோருக்குள்ளும் உறைந்தே கிடக்கிறது... அதன் வெளிப்பாடுதான் "சாப்பிட்டீங்களா.." என்றோ... "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..உடம்பு சரி இல்லையா.." என்று யாராவது கேட்டால் உடனே அவர்களை பிடித்துப்போவது...



தேவைகளின் அழுத்தம்... அழுத்தம் கொடுக்கும் கவலை.. கவலை கொடுக்கும் பயம்.. பயம் கொடுக்கும் எரிச்சல் என அடுத்தடுத்த சங்கிலித்தொடர் நிகழ்வுகளோ... இல்லை... "அட... இதெல்லாம் சாதாரண விஷயம்.. இதை கேக்காட்டி என்ன ஆயிடப்போகுது.." என்ற ஈசினெஸ் அல்லது அலட்சியம் அப்படியான கேள்விகளை தவிர்க்க வைக்கிறது


ஆனால் நமக்கு மிகச்சாதாரண விஷயமாக தெரியும் அம்மாதிரியான கேள்விகள் எதிர்த்தரப்பிற்கு மிகப்பெரிய தாகமாய் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை...

உடன் இருப்பவர்கள், உறவுகள், அக்கம்-பக்கத்தவர்களிடம் இதுமாதிரியான "அக்கறை" கேள்விகள் கிடைக்காதபோது ... அந்த அக்கறை கேள்விகள் கேட்பவர்களையே மனம் "நெருக்கமானவர்கள்" என்று நம்பத்தொடங்குகிறது.... அவர்களோடு நெருக்கம் வளர்க்கும் ஆவல் கொள்கிறது... இந்த ஆவல் நேர்முறை/சிக்கல்முறை உறவுகளாக பரிணமிக்கிறது...


ஆனால், இதில் இன்னொரு சிக்கல்... அப்படி அக்கறை கேள்விகள் கேட்பவர்கள் தொண்ணூறு சதவிகிதம் உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருப்பது தான் அந்த சிக்கல்... ஆரம்ப காலத்தில் அப்படி அக்கறையாய் பேசுபவர்கள் தன்னுடைய வட்டத்திற்கும் அந்த ஏக்கம் கொண்டவர்களை கொண்டுவந்தபின் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறார்கள்... அந்த நகர்வு... உடம்பு, பணம் இப்படி ஏதோ ஒரு தேவையாய் இருக்கும் போது சிலர் சுதாரித்து விடுகிறார்கள்.. பலரோ... இழப்பை சந்தித்தபின் வெம்பி சுருங்குகிறார்கள்...



சமூகத்தின் ஒரு பெரிய , வெளித்தெரியாத மனநோயாக பரவிக்கொண்டிருக்கும் "அக்கறையின்மை" உடனடியாய் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...



"சாப்டியா...." என்றோ..." ஏன் ஒரு மாதிரி இருக்க... ஒன்னும் செய்ய வேண்டாம்.. ரெஸ்ட் எடு" என்று கணவன் சொல்லும் போது தன் மீது அக்கறையாய் இருக்கும் கணவனுக்காக இன்னும் கூடுதலாய் உழைக்க தயாராக இருக்கிறாள் மனைவி..



"ஏன்... ரொம்ப டல்லா இருக்கீங்க... வேலை அதிகமா..." என்று அக்கறையுடன் விசாரித்து தலை கோதும் மனைவியிடம் அடிமையாய் கிடக்க தயாராக இருக்கிறான் கணவன்..


ஒரு ஆறுதலான அணைப்பு.. ஆறுதலான கேள்வி.. ஆறுதலான தழுவல்... ஆயிரம் நம்பிக்கைகளை விதைக்கிறது... அந்த நம்பிக்கை அதிகம் உழைக்க தூண்டுகிறது....
ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு நிலையில் வெளிப்படுத்தப்படும் அக்கறைக்காகத்தான் தவமிருக்கிறது...

ஆனால் ஒட்டுமொத்த மானுடர்களுக்கும் அந்த "அக்கறை" என்பது "அக்கரை"யாகத்தான் இருக்கிறது...

கொஞ்சம் அக்கறை காட்டுங்களேன்.... ப்ளீஸ்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக