புதன், 28 ஜூன், 2017

உறவுப்பிறழ்வு .. அதாவது கள்ளக்காதல்


சமகால ஊடக செய்திகளில் அடிக்கடி இடம் பெரும் செய்தி... இது ஒரு சமூக சீர்கேடு என்ற போதிலும் வழக்கம் போல கிளைகளை விமர்சிக்காமல் வேர்களை தேடியே இந்த கட்டுரை


வேலையோ-வாழ்க்கையோ.. ஒரு தேவை நிறைவடையாத போது மட்டுமே வேறொரு வாய்ப்பிற்கு முயற்சிக்கிறோம்.. ஒரு தம்பதிகளுக்குள் உடல்-மன தேவைகள் நிறைவடையாத போது மட்டுமே அவர்கள் வேறொரு தேடலை முன்னெடுக்கிறார்கள்.. சமகால (காதல் திருமணங்கள் நீங்கலாக) தம்பதிகளில் சற்றேறக்குறைய சதவிகிதம் ஜோடிகள் பொருந்தா வயதில் இருப்பவர்கள்.. இரு கருவின் குற்றமல்ல... காலத்தின் குற்றம்..


ஒரு பெண் திருமணத்திற்கு தயாரான உடல் வளர்ச்சியை பெற்ற சில காலத்திலேயே அவர்களுக்கான திருமண முயற்சியில் இறங்கும் பெற்றோர்கள் அவர்களின் ஆண் பிள்ளையை பற்றி யோசிப்பதே இல்லை.. ஒரு பெண் தன்னுடைய பதினாறாவது வயதை எட்டியது முதலே பெற்றோர்கள் அவளின் திருமணத்தை பற்றி சிந்திக்க தொடங்குகிறார்கள்..


அதிகபட்சமாக 25 வயதிற்குள் திருமணம் செய்விக்கிறார்கள்.. சமூக காரணங்கள் , வரதட்சினை என்று பல இடர்பாடுகள் இருப்பினும் கூட கடன் வாங்கியோ, இல்லை எதையாவது விற்று கூட அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.. (சில குடியிருக்கும் வீட்டை விற்று கூட)
ஆனால் அதே வயதில் பருவமடையும் ஆண் பிள்ளைகளின் திருமணமோ, தங்கை திருமணம்., வீடு கட்டுதல், செட்டில் ஆக வில்லை, கடன் இருக்கிறது என்ற பல்வேறு காரணங்களால் முப்பதுகளை கடந்தும் கூட தள்ளிப்போடப்படுகிறது..

Image may contain: 2 people, people sitting

இருபத்தைந்து வயதிற்கு மேல் திருமணம் செய்யாமல் பெண்குழந்தையை வீட்டில் வைத்திருப்பதை அவமானமாக கருதும் எந்த பெற்றோரும் முப்பது வயது வரை திருமணமாகாமல் இருக்கும் தன்னுடைய மகனை பற்றி யோசிப்பதே இல்லை... அவனுக்கு திருமணம் செய்யலாம் என்று யோசித்து பெண் தேடி திருமணம் செய்யும் போது வாழ்வின் அடிநாத சக்தியை கடைசி கால தக்கவைத்தலில் இருக்கிறான் அவன்...



ஒரு மனமொத்த தம்பதியாக நெடுங்காலம் வாழ அவர்களின் மனமொழி-உடல்மொழி ஒத்துழைத்து தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்... அப்படியான தேவைகள் தீர்க்கப்படாத நிமிடத்தில் குடும்ப வாழ்க்கையில் விரிசல் விழத் தொடங்குகிறது... சமகால ஆண்களில் என்பது சதவிகிதம் பேர் , நாற்பது வயதை கடந்தவர்கள் ஒரு இளம் பெண்ணின் உடல் தேவைகளை முழுமையாய் தீர்க்கும் தகுதியற்று இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத மருத்துவ உண்மை.. இதற்கு காரணம் டென்ஷன். விஷம் கலந்துவிட்ட உணவு, கதிர்வீச்சு நிறைந்த காற்று, மது/புகை போன்ற போதை வஸ்த்துகள் என பல்வேறு காரணங்கள்... இவைகள் எல்லாமே சமகால ஆண்களின் ஆண்மையை கபளீகரம் செய்வதாகவே இருக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை..



33 வயதில் ஒரு ஆண்மகனுக்கு திருமணம் செய்யும் போது, வாழ்க்கைப்பட்டு வரும் மணப்பெண்ணுக்கு வயது 23 ஆகவோ , சமயத்தில் 18 ஆகவோ கூட இருக்கிறது.. உடல் தேவைகளை பூர்த்தி செய்யும் கடைசி காலகட்டத்தில் இருக்கும் ஆணும், ஆரம்ப நாட்களில் இருக்கும் பெண்ணும் தவிர்க்க முடியாமல் ஜோடி சேர நேர்கிறது... இயல்பான ஆரம்ப கால வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த ஆண் பின்வாங்க.. பல பிரச்சினைகள் .. உருவாகிறது. முடியாத இந்த தேவைகள் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்படுகிறது... இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளே ஆண் மதுவுக்கு அடிமையாவதும், பெண் பிறழ் உறவுகளை தேடுவதும்...


அதே நேரம் அந்த ஆணை குறை சொல்வதிலும் அர்த்தமில்லை... குடும்ப காரணங்களால் தன்னுடைய திருமணத்தை பற்றி சிந்திக்க நேரமில்லாமல் இருக்கும் ஆண்மகன் தனக்கான வாழ்க்கையை சிந்திக்க ஆரம்பிக்கும் பொழுதில் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி கிடைக்கும் பெண்ணை நிராகரித்தால் கடைசி வரை வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போகும் என்பதை நினைத்து பெரிய வித்தியாசம் இருந்தாலும் கூட மௌனம் காக்கிறான்....


"என் தாய்க்கும் தந்தைக்கும் சுமார் 25 வருட வயது வித்தியாசம் இருந்தது.. அவர்கள் மனமொத்து வாழவில்லையா...??" என்று கேட்கலாம்... அந்த கால உணவு ,ரசாயன கலப்பு, தொழில்நுட்ப வசதி கொடுக்கும் கதிர்வீச்சுக்கள் இல்லை... உடல் உழைப்பு அதிகம் .. ஆண்கள் வயதாகி இறக்கும்வரை கூட ஒரு பெண்ணை உடல்வழியாய் திருப்தி படுத்தும் சக்தியை பெற்றிருந்தார்கள்... அதே சமயம் பெண்களின் உடல் சார்ந்த பாலியல்

தேவைகளுக்கான வயதும் நம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை... ஒரு பெண்ணின் பாலியல் தேவைகள் என்பது அவர்களின் பருவகாலம் தொடங்கி, அதிக பட்சம் அவர்களின் மெனோபாஸ் காலம் வரையிலோ, பிள்ளைகள் வளரும் காலம் வரையிலோதான் இருக்கிறது...( விதிவிலக்காகவும் இருக்கலாம்... பெரும்பான்மையோரை கருத்தில் கொண்டே இந்த கட்டுரை ) அந்த கால ஆண்களின் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உதவாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தங்கையை திருமணம் செய்விக்கும் சம்பவங்களை வரலாறு சொல்லும்...மேலும்..அந்த தம்பதிகளுக்குள் ஏதாவது மன விலகல் ஏற்படும் பட்சத்தில் அப்போதிருந்த கூட்டுக்குடும்ப முறையில் உடன் வசித்த பெரியோர்கள் நெறிப்படுத்தினார்கள்....


ஆனால் சமகால வாழ்க்கை முறை தொலைத்துவிட்ட கூட்டுக்குடும்பத்தில் நெறிபடுத்தும் ஆட்களே இல்லை... அதோடு செயலிழந்து போய் நிற்கும் ஆண்கள் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தகுதியோடும் இல்லை... இதன் பலனாக குடும்பத்தில் ஏற்படும் விரிசல்..... இது போன்ற வெளியில் காட்டிக்கொள்ள முடியாத காரணங்களை பின்புலமாக கொண்டு பல்வேறு பிரச்சனைகளை பிரசவிக்கிறது... இதை தொடர்ந்து ஒருவருக்கொருவர் எரிச்சல் மொழிகளாலும், விலகலாலும் ஒரே வீட்டிற்கும் இருவேறு துருவங்கள் ஆகிறார்கள்....இதில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் போதை போன்ற விஷயங்களில் தலையை புதைத்துக்கொண்டு தப்பிக்க நினைக்கிறார்கள்.


ஏதோ கொஞ்சம் மிச்சமிருக்கும் கலாச்சாரத்தின் பயனாக இந்த வாழ்க்கை முறையின் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் வேறொரு வழியை தேடிப்போவதில்லை.. அதே நேரம்.. தேடிவரும் வழியை அவர்கள் நிராகரிப்பதில்லை... தம்முடைய உடல் தேவையை தீர்த்து ஆறுதலாய் பேசும் ஒருவரிடம் அவர்கள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள்...விளைவு... பவித்ராக்கள்... வெளியில் தெரிந்து ஒரு பவித்ரா... வெளியில் தெரியாமல் ஓராயிரம் பவித்ராக்கள்..


இதற்கான தீர்வுதான் என்ன???

மகளின் திருமண வயதை கவனத்தில் கொள்ளும் பெற்றோர்கள் தங்களின் மகனின் திருமண கவனத்தில் எடுக்க .வேண்டும். தற்போதைய கல்வியின் வாயிலாக பெண்களின் திருமண காலகட்டம் சற்று நீட்டிக்கப்பட்டிருக்கிறது... தங்கள் மகனுக்கும் உயரிய வயதில் திருமணம் செய்ய முயற்சித்தால் குறைந்தபட்சம் சம வயதுடைய-அதிகபட்சம் ஐந்து வருடங்கள் மட்டுமே வித்தியாசமுடைய மணமகளை கண்டுபிடிக்க முடியும்.. இந்த வித்தியாசம் முதலில் அவர்களின் உடல் தேவைகளை . தீர்க்கும்.உடல் தேவைகள் தீர்ந்தபட்சத்தில் அவர்கள் மற்ற பிரச்சினைகள் பற்றி நிதானமாக கலந்து சிந்திக்க முடியும்.. உதாரணமாக 25-20. என்ற வயது 
வித்தியாசத்தில் தம்பதிகள் இருந்தால் கூட குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அவர்களின் உடல் தேவைகள் திருப்தியாய் தீரும்... அந்த பதினைந்து ஆண்டுகால திருப்தியான வாழ்க்கை அவர்களின் சந்ததிகளை அற்புதமாக உருவாக்க,எஞ்சி இருக்கும் வாழ்வை புரிதலுடன் கழிக்க உதவும்...

உங்கள் மருமகள்-மகள் நாளை ஒரு பவித்ராவாய் கேவலப்படுத்தப்படக்கூடாது எனில் என் கட்டுரையை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக