வியாழன், 29 ஜூன், 2017

ஆரம்ப பள்ளியில் ஒரு அரசு நிர்வாகக் கல்வி

Image may contain: tree and outdoor
ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை உள்ள ஊராட்சி-ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் அரசியல்-நிர்வாகப்படிப்பு செயல்முறையாய் சொல்லித்தரப்பட்டது... இது பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம்..

பள்ளியில் "பாலர் அவை" (பாலர் சபை") என்றொரு நிர்வாகக்குழு அமைக்கப்படும்.. அந்த நிர்வாக குழுவில் இருபவர்கள் "அமைச்சர்கள்".. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை கொண்டது அந்த அமைச்சர் குழு... ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அமைச்சர்கள், நான்காம் வகுப்பு மாணவர்கள் - துணை அமைச்சர்கள்..


முதல் அமைச்சர்- இவர்தான் பள்ளிக்கூட பிரேயரில் "நேர்நில்-ஓய்வு நில்- கடவுள் வாழ்த்து-தேசிய கீதம்" என்றெல்லாம் கமான்ட் செய்து வழிநடத்துவார்.

சுகாதார அமைச்சர் - மாணவர்கள் தூய்மையான ஆடை அணிந்து வருகிறார்களா, தளி சீவி இருக்கிறார்களா, வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா என கண்காணிப்பதும், அவைகள் சரியாக இல்லை என்றால் சரி செய்ய வற்புறுத்துவதும் இவரின் பணி

விவசாய அமைச்சர்- பள்ளியில் இருக்கும் கிணறில் (பின்னாளில் ஒரு ஆழ்குழாய் அடிபம்ப் வைக்கப்பட்டது ) நீர் இறைத்து வெண்டை, கொத்தவரை, கத்திரி போன்ற பயிர்கள் வளர்க்கப்படும்.. செம்பருத்தி /குளோரியா/கிளுவை மரங்களால் ஆனா வேலியும் இருக்கும்.. இவற்றை பாதுகாப்பது இவரின் பணி


கல்வி-கலை அமைச்சர் - பள்ளியில் தோசை கல் போல கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் மணியை அடிப்பது இவர் வேலை. இந்த அமைச்சருக்குதான் நிறைய போட்டி இருக்கும்

உணவு அமைச்சர் - சத்துணவு(மதிய உணவு) எத்தனை பேருக்கு தயாரிகபப்ட வேண்டும், எத்தனை கிலோ அரிசி-பருப்பு-எவ்வளவு எண்ணெய் எடுக்கப்படுகிறது என்பது முதல், மதியம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக பறிமாறப்படுகிறதா என்பதை கண்கானிப்பதுவும் இவரது வேலை..

மேற்கண்ட அனைத்து அமைச்சர்களையும் ஆசிரியர்கள் வழி நடத்துவார்கள்.. இந்த அமைச்சர்களின் கட்டளைக்கு பணியாதவர்களை ஆசிரியர்கள் முட்டி போடா வைத்தோ - அடி கொடுத்தோ தண்டிப்பார்கள். அதனால் அனைத்து மாணவர்களும் கட்டுப்படுவார்கள் (ஒரு சில அடாவடி மாணவர்கள் மீறி நடப்பதும் உண்டு

இந்த அமைச்சர்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும், மகிழமர மைதான நிழலில் கூடி இருக்கும் மாணவர்களால் "கை தூக்கி ஓட்டுப்போடும்" முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்... பிரச்சாரம் எல்லாம் நடக்காது.... (??) தேர்தல் நேரத்தில்தான் வேட்பாளரே , தான் தேர்தலில் நிற்பதை முடிவு செய்வார்.

வகுப்பறை-மைதானம் சுத்தம் செய்தல், தோட்டம் போடுதல்,தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளை மாணவர்களே செய்வார்கள். தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மாலை பிரேயர் நேரத்தில் ஏலம் விடப்படும்.. இருபத்தைந்து காசு முதல் இரண்டு ரூபாய் வரை ஏலத்தொகை இருக்கும்.. இப்படி ஏழாம் விட்டு சேர்ந்த தொகையை வகுப்பறைக்கு தண்ணீர் ட்ரம், சாக்பீஸ் போன்றவை வாங்க உபயோகிப்பார்கள். (ஊழல் வாதிகள் இல்லவே இல்லை)

மாதம் ஒரு முறையோ- இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ "பாலர் அவை" கூட்டம் மாலை 3.00 மணி அளவில் தொடங்கும். ஒரு கூட்டத்திற்கும்- அடுத்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த அமைச்சர்கள் என்ன பணி செய்தார்கள் என்பதை ஒரு அறிக்கையாக இந்த அமைச்சர்கள் வாசிப்பார்கள் ( பெரும்பாலும் இந்த அறிக்கை ஆசிரியர்களால் தயாரித்து கொடுக்கபட்டிருக்கும்)

அதன் பிறகு கேள்வி நேரம். ஒரு தேதியை குறிப்பிட்டு அன்று இந்த வகுப்பறை சுத்தம் செய்யப்படவில்லை..அதை ஏன் சுகாதார அமைச்சர் கவனிக்கவில்லை...?" "அன்று ஒரு செடி பிடுங்கப்பட்டிருந்தது... அதை ஏன் விவசாய அமைச்சர் கவனிக்கவில்லை.." போன்ற கேள்விகளை மாணவர்கள் எழுப்புவார்கள்.. அதற்கான பதிலை சம்மந்தப்பட்ட அமைச்சர் சொல்ல வேண்டும்... "மாணவர்கள் என்னிடம் வந்து புகார் செய்தார்கள்.. நான் உடனே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தேன்... " "நான் ஆசிரியரிடம் புகார் செய்தேன்.. " " செடியை பிடுங்கியவரை ஆசிரியரிடம் கொண்டு போய் நிறுத்தினேன்" என்பது போன்ற பதில்களை அந்த அமைச்சர்கள் முன்வைப்பார்கள்...


இந்த கூட ஏற்பாடுகளை கல்வி-கலை அமைச்சர் கவனிப்பார்.. முடிவில் நன்றி கூறுவார்... கூட்டம் இனிதே கலையும்...
சுமார் 60-70 மாணவர்கள் , ஐந்து ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமையல்காரர், ஒரு உதவியாளர் என கலகலப்பாக இருக்கும் அந்த பள்ளி..
திரு P .K .அய்யாவு (தலைமை ஆசிரியர்)
திரு.நமச்சிவாயம் (நான்காம் வகுப்பு ஆசிரியர்)
திரு.வேலாயுதம் (மூன்றாம் வகுப்பு ஆசிரியர்)
திரு.சோமு (இரண்டாம் வகுப்பு ஆசிரியர்) - பின்நாளில் இவர் தலைமை ஆசிரியராய் அதே பள்ளியில் பணிபுரிந்தார்

திரு.தங்கவேலு (ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்)- இவர்தான் இந்த பாலர் அவை மற்றும் பள்ளியில் நடக்கும் கலை தொடர்பான விஷயங்களின் சூத்திரதாரி.
திரு.வைத்தியநாதன்- சத்துணவு அமைப்பாளர்
திருமதி,கமலம்- சமையல்
(சமையல் உதவியாளரின் பெயர் நினைவில் இல்லை . மன்னிக்கவும்.)
மாணவர்கள் சோர்வடையாமல் இருக்கவும், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவும் , புத்துணர்ச்சி இடைவேளை, ஆயத்தம் செய்தல் போன்ற சிறப்பு நேரங்களையும் மணி ஒலித்து அறிவிக்கப்படும் .

9.00 AM - ஒன்னாம்பெல்.. அதாவது பள்ளிக்கு வர ஆயத்த மணி
10.00AM - பிரேயர் அழைப்பு மற்றும் பள்ளி நேரம் தொடங்கும் மணி
11.30 AM 11.45AM - புத்துணர்ச்சி இடைவேளை
1.00PM 1.30PM 2.00PM - உணவு இடைவேளை
3.30PM 3.45PM- புத்துணர்ச்சி இடைவேளை
4.30PM 4.55PM- விளையாட்டு நேரம்
5.00-5.10PM - பிரேயர் மற்றும் பள்ளி நேரம் முடிவு.

இந்த பள்ளியின் அறிவிப்பு மணிகளை வைத்தே வயலில் வேலை செய்வோர், மாடு மேய்க்க செல்வோர் .மற்ற இடங்களுக்கு செல்வோர் நேரத்தை அறிந்துகொள்வார்கள்... ஒன்பது மணி ஆனால்.."ஒன்னாம்பெல்லு அடிச்சுட்டுது.. மாட்ட அவுத்து விடு" என்ற குரல்களை கேட்கலாம்..
தீபாவளி-பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு முன்பாக சத்துணவுடன் இனிப்பு- வடை போன்றவை வழங்கப்படும். பள்ளியை சுற்றி செம்பருத்தி, குளோரியா மற்றும் கிளுவை முட்களால் ஆன உறுதியான வேலி அமைக்கபட்டிருக்கும்... மைதானம் மகிழ மரம் ,வாதுமை மரம், மாமரம் மற்றும் தென்னை மரங்களால் நிழல் சூழ்ந்திருக்கும்..

இந்த பள்ளியில் விதிக்கப்பட்ட நாற்றுகள் உலக வரைபடத்தின் எழுபது சதவிகித நாடுகளில் நடப்பட்டிருக்கிறது.. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் பல நிறுவனங்களில் பற்பல பொறுப்புகளிலும், தாய்நாட்டில் அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்களில் எல்லா மட்டங்களிலும் பணிபுரிந்தும், சிலர் சொந்த தொழிலுடனும் திகழ்கிறார்கள்..

இந்த எல்லா பெருமைக்கும் சொந்தம்.. எங்கள் ஊர் சிலம்பவேளாங்காட்டில் (தஞ்சை மாவட்டம்) அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தான்...

1970 மற்றும் 1980 களில் அப்படி இருந்த பள்ளியின் நிலை... இன்று வெறும் 7 மாணவர்களும் , ஒரே ஒரு ஆசிரியருடனும் கவலைக்கிடமாய் இருக்கிறது... இப்போது அந்த வாதுமை மரம் இல்லை.. அந்த மகிழ மரம் இல்லை.. குளோரியாவும் செம்பருத்தியும் அடர்ந்திருந்த வேலி, கம்பி வேலியாய் மாறி இருக்கிறது... அந்த தோட்டம் இல்லை.. மாணவர்களின் அந்த உற்சாக கூச்சல் இல்லை... அந்த பாலர் அவை இல்லை...

குழந்தை பருவத்திலேயே நிர்வாக கல்வியை, செயல்படுத்த வைத்தே கற்றுக்கொடுத்த அந்த பள்ளியின் இன்றைய நிலை வேதனை தருகிறது..

புகைப்படத்தில் இருப்பது அதே பள்ளிதான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக