வியாழன், 29 ஜூன், 2017

ஈகோ- வாழ்க்கையை விழுங்கிவிடும்..

ஈகோ வேண்டாமே ப்ளீஸ்...

Image may contain: 1 person

எங்களூரில் நான்கைந்து தலைமுறைகளாகவே வசதி பெற்ற குடும்பம்.. அந்த குடும்பத்தில் இருந்து பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொரு வசதியான வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு சென்றார் ஒரு பெண்.. ஆரம்பகாலத்தில் இனிமையாக தொடங்கிய அவர்களுக்குள்ளான குடும்ப வாழ்வு என்ன காரணத்தாலோ தொடர முடியாமல் போனது...

கணவனை பிரிந்த அந்த பெண் பிறந்த வீட்டிற்கே திரும்பிவிட்டார்... அதன் பிறகு அவரது வாழ்க்கையை தாக்கிய சோகங்கள் சொல்லி மாளாது... தொடர்ந்த மன அழுத்தத்தால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளான அந்த பெண் தனக்குத்தானே பேசுதல், கற்பனையில் யாரையோ எதிரியாக்கி சண்டை போடுதல்... இப்படியாக மாறிப்போனார்... நாளடைவில் இதையும் ஒரு காரணமாக காட்டிய அவள் கணவன் வீட்டார் அவருக்கு வேறொரு பெண்ணை மணமுடித்து குழந்தை-குட்டி என அவர்களது வாழ்க்கை இயல்பாய் நகரத்தொடங்கி விட்டது..


சக்கரத்தின் மேலே இருந்த பகுதி கீழே இறங்கியே ஆக வேண்டும் என்ற இயற்கை நியதியின் அடிப்படையோ, தவறான குடும்ப நிர்வாகமோ வசதியான இவர்களின் (சம்மந்தப்பட்ட பெண்ணின் ) குடும்பத்தை வறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கபளீகரம் செய்துகொண்டே வருடங்கள் கடந்தது.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. சற்றேறக்குறைய நாற்பது வருடங்கள்...


இயல்பு வாழ்க்கையை மட்டுமே வாழத்தெரிந்த அவர்கள் பெற்றோரின் அறியாமையோ-வசதியின்மையோ அந்த பெண்ணின் மனப்பிறழ்வு நோய் பற்றி அவர்கள் அறிய முடியாமலும், சிகிச்சை செய்ய முடியாமலும் போனதுதான் துரதிஷ்டம்..

ஊர் அந்த பெண்ணை "கிறுக்கு" என்றுதான் அடையாளப்படுத்தியது... திருமணமான பெண்ணுக்கென்று தமிழ் சமூகம் கொடுத்திருந்த எந்த அடையாளத்தையும் அவர் தாங்கி இருக்கவில்லை.. இப்படியான சூழ்நிலையில் இவரது கணவர் வயதான நிலையில் நோய்-வாய்ப்பட்டு மரணத்தை தழுவினார்..

இதுநாள் வரையில் யாரை "கிறுக்கு"என்று ஊர் சொல்லியதோ அந்த பெண் தன்னுடைய பெரியப்பா மகன் மற்றும் சிலரை அணுகி கணவனின் இறப்பிற்கு செல்ல வேண்டும் என்று சொன்ன போது என்னுள் எழுந்த ஆச்சர்ய அலை அடங்க சில மணித்திலாயங்கள் ஆனதை மறுப்பதற்கில்லை..

பிறகு ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அவரை அழைத்துக்கொண்டு மரண வீட்டிற்கு சென்று சில நாழிகைகள் மட்டும் அங்கு இருந்துவிட்டு திரும்பி விட்டார்கள்... ஆனால்.. கணவன் இறந்த ஒரு சாதாரண தமிழ் சமூக மனைவியின் தார்மீக கடமைகளை, தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்தபடியே இவர் பின்பற்றினார்... நாள் முழுக்க பட்டினி... மாலையில் று வேளை மட்டும் சைவ உணவு... என்று பதினாறு நாட்கள் இவரது விரதம் நீடித்தது..


யாரை கிறுக்கு என்று பரிகாசம் செய்தார்களோ... யார் கணவனை விட்டு விலகி வந்தார் என்று ஊர் நிந்தித்ததோ... அவர் தன்னுடைய கடமைகளை கணவனுக்காக செய்தபோது என்னுள் எழுந்த அந்த கேள்விக்கான விடை கிடைக்கவே இல்லை..

ஆம்... சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக கணவனின் அருகாமையோ, அவர் பயன் படுத்திய பொருட்களின் அருகாமையோ கூட கிடைக்கவில்லை.. உடன் வாழ்ந்ததோ சில மாதங்கள் தான்.. பிரிந்து வாழ்ந்த காலம் தான் இவரது மண வாழ்வின் பெரும்பகுதி... ஆனாலும் அதற்கு பிறகும் , மனநிலை சரியிலாமல் போன நிலையிலும் கூட கணவனின் மரணத்திற்கான கடமைகளை நிறைவேற்ற துடித்த இவர் ஏன் வாழ்ந்த காலத்தில் அவரது உரிமைகளை அனுபவிக்கவோ- தக்கவைத்துக்கொள்ளவோ முயல வில்லை..??

கணவனின் வருமானத்தில் குடும்பம் நடத்தி, கணவனின் மூச்சுக்காற்றை இறுதிவரை சுவாசிக்கும் காதல் வாழ்க்கை நடத்திய சமகால பெண்கள் கூட கணவனின் மரணத்திற்கு பிறகு கடைபிடிக்க தவறிய சம்பிரதாயங்களை..... இவரை கடைபிடிக்க எது தூண்டியது??

மரணத்திற்கு பிறகு இவர் பின்பற்றிய விரதமோ- சம்பிரதாயமோ நிச்சயம் சம்மந்தப்பட்ட கணவனுக்கு தெரியப்போவதில்லை... இன்று காட்டும் அன்பை ஏன் அன்று அவர் மறைத்து வைத்தார்... அப்படி மறைத்து வைத்ததால் ஏற்படுத்திய இழப்புகள் எத்தனை எத்தனை..??

இறக்கும் வரை சம்மந்தப்பட்டவருக்கு உணர்த்தப்படாத அன்பு எதை சாதித்தது?? இதில் ஐம்பது சதவிகிதத்தை அவர் வாழும் காலத்தில் காட்டி இருந்தால் அவர்களது வாழ்க்கையில் இன்னொரு நபருக்கு பங்கு கொடுக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே...


என் எல்லா கேள்விகளுக்கும் இரண்டெழுத்துக்கள் கொண்ட ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாய் கிடைகிறது..

ஆம்.. "ஈகோ" என்ற நஞ்சுதான் இந்த மொத்த விளைவிற்குமான காரணம்... ஈகோவை தூக்கி எறிந்துவிட்ட ஆரம்பகாலத்திலேயே கொஞ்சமே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசாததால் நாற்பதாண்டுகாலம் இயல்பு வாழ்க்கை இல்லாமல் போனதுதான் மிச்சம்...


கல்விக்கூடங்களில் கல்வி அறிவை பெறாதவர்கள் அவர்கள்... உள்ளூர் வாழ்க்கைக்கல்வியை மட்டுமே கற்றவர்கள் அவர்கள்... அவர்களுக்குள்ளேயே குடியிருந்த ஈகோ அவர்களின் வாழ்க்கைக்கோட்டை மரணம் வரை சேர விடாமல் தடுத்துவிட்டது... சமகால வாழ்க்கை முறையின் நவீன பரிமாணங்களை பார்ப்பவர்கள் நாம்... நமக்குள் இருக்கும் ஈகோ வலுவானது.... இந்த ஈகோ மரணத்திற்கப்பாலும் பிரிக்கும் வல்லமை கொண்டது... கூடவே பழிவாங்கும் வெறியையும் ஊட்டவல்லது...

கொஞ்சம் யோசியுங்களேன்... இப்படியான ஈகோ தேவையா....? பூமியிலேயே நரகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஈகோ தேவையா...

ஈகோவை விட்டுவிடுங்களேன்... ப்ளீஸ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக