வியாழன், 29 ஜூன், 2017

இது அரசின் கையாலாகாத தனம்- சாதனையல்ல

துவரம் பருப்பின் விலை உயர்ந்ததை அடுத்து அதனை சமாளிக்க அரசு “மலிவு விலை “ துவரம் பருப்பு விற்பனையை துவங்கி இருக்கிறது... அதுவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும்.. இது கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது...

ஒட்டுமொத்த இந்தியாவிலும் பருப்பு பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டிருந்தாலும், தமிழக அரசு மட்டும் அதி தீவிர நடவடிக்கையாக மலிவு விலை பருப்பை கொண்டு வந்திருக்கிறது...
பார்த்தீர்களா.. எங்கள் ஆட்சியாளர்களின் செயல் வேகத்தை... மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எங்கள் ஆட்சியாளர்கள் தீப்பிடித்த வேகத்தில் களமிறங்குவார்கள்... என்று மார் தட்ட முடியவில்லை...
ஏன்... இது நல்ல விஷயம் தானே.... இதற்காக பெருமைப்படுவதை ஏன் தவிர்க்கிறீர்கள்.. என்றால்.. எப்போதும் போல நம்முள் உறைந்திருக்கும் சாமானியனின் சந்தேகங்களே அதற்கான காரணம்...


Image may contain: 2 people
மார்க்கெட்டில் பருப்பு விலை உயர்வா... அரசு மலிவு விலையில் விற்கும்...
வெளியில் ஹோட்டல் சாப்பாட்டின் விலை அதிகமா... அரசு மலிவு விலையில் விற்கும்...
வெளியில் தண்ணீர் பாட்டில் விலை அதிகமா... அரசு மலிவு விலையில் விற்கும்,.
வெளியில் மருந்துகளின் விலை அதிகமா... அரசு மலிவு விலையில் விற்கும்...



மேலோட்டமாக பார்த்தால் இவை எல்லாம் அரசின் சாதனைகலாகவோ.. மக்கள் நலனின் மீது அரசு கொண்ட அக்கறையாகவோ தோன்றலாம்... ஆனால் நம் சாமான்யனின் சிந்தனையோ.. வேறாக இருக்கிறது..


தனிப்பட்ட நபராலோ/தனி நிறுவனங்களாலோ விற்பனை செய்யப்பட கூடிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று... அப்படி விற்கப்படும் பொருளின் உற்பத்தி செலவினங்கள், உற்பத்தி நிலை, அரசின் வரிகள் எல்லாம் சேர்ந்து சம்மந்தப்பட்ட விற்பனையாளரின் உழைப்பிற்கும் , லாபத்திற்கும் போக அந்த பொருளின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.. அதற்கு மேல் ஒரு ரூபாய் உயர்ந்தாலும் அதற்கான காரணத்தை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அரசுக்கு விளக்க வேண்டும்... நினைத்தால் நினைத்தபடி விலையேற்றம் செய்வதோ.. சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்குவதோ தனியாரால் முடியும் என்றால் அரசு இயந்திரம் செயலற்று போய் கிடப்பதாக மட்டுமே அர்த்தம்...


சில தனியார் நிறுவனங்கள் (சர்வதேச சந்தையை விடுங்கள்.. உள்ளூர் தயாரிப்பு மற்றும் உள்ளூர் விற்பனை) விலையை உயர்த்தியதால் அரசு மக்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் மலிவு விலையில் விற்பனை செய்தால்... அதன் பின் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா?
பருப்பு வேலி மார்கெட்டில் 250 ரூபாய்க்கு கொள்முதல் செய்து மக்களுக்கு மலிவு விலையில் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது...(உண்மை கொள்முதல் விலை 170 ரூபாய் ஆகவோ, அதற்கும் குறைவாகவோ கூட இருக்கலாம்) என்று கணக்கு எழுதி.. இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு இத்தனை ஆயிரம் கோடி.. என்று அறிக்கை விடுவார்கள்...



உதாரணமாக, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் யூனிட் ஒன்றுக்கு 13 ரூபாய் வீதம் வாங்கி,, அதை பொதுமக்களுக்கு 2.50க்கு கொடுத்த வகையில் அரசின் நட்டம் இத்தனை ஆயிரம் கோடிகள்... அதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இத்தனை கோடிகள் கடன் இருக்கிறது என்று சொல்வதை போல...


என்னை பொறுத்தவரை... இலவசங்களோ- மலிவு விலைகளோ அரசுகள் மக்களை ஏமாற்ற கண்டுபிடித்த மத்தாப்பூ வெளிச்சங்கள்.... இப்படியான விலை உயர்வை கட்டுப்படுத்த தெரியாத அரசுகளும், மக்களுக்கு வாங்கும் சக்தியை பெருக்கி தராத அரசுகளும் இந்த சமூகத்தின் சாபக்கேடுகள்.. அது திமுக தலைமையில் இருந்தாலும், அதிமுக தலைமையில் இருந்தாலும் சரி...



நிச்சயம் இந்த மலிவு விலைக் கடைகளால் எங்கோ சில ஏழை மக்கள் பலனடந்ததை போல காட்டினாலும், இதனால் காட்டப்படப்போகும் நஷ்டக்கோடிகளும் , அதனால் செய்யப்படப்போகும் ஊழல் கோடிகளும் ஒருநாள் வெளிவரும்...
எப்போதும் போல அதை செய்தி தொலைகாட்சிகள் பரபரப்பாக்கி காசாக்கும்... எப்போதும் போல ஏமார்ந்த முட்டாள் மக்கள் இப்போதும் அதையே செய்வார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக